Sunday, July 24, 2005

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 10

5.4. முரண் தொடை

செய்யுளில் [b]முரண் தொடை என்பது தனிச் சிறப்புடையது. கவிதைச் சுவையை நன்கு தரவல்லது.

ஒரு சொல்லுக்கும் வேறொரு சொல்லுக்கும் எதிர் மறையாகப் பொருள் நல்குமாறு அமைத்துத் தொடுப்பது முரண்தொடை.

எ.டு:-

நம் மன்றத்தில் "முரண் காட்சிப்பாக்கள்" சிறந்த எடுத்துக்காட்டு.

இணை முரண் தொடை:-

எ.டு:-
சிறுகால் பேருரு கொண்டெதிர் நின்று

இதில் முதல் இரு சீர்களில் 'சிறு' - 'பெரிய உரு' என்று வந்ததால் இணை முரண் தொடை ஆயிற்று.

பொழிப்பு முரண் தொடை:-

எ.டு:-
ஓரடி யாலே இரு நிலம் அளந்து

இதில் முதல், மூன்றாம் சீரில் 'ஒரு - இரு' என்று வந்து பொழிப்பு முரண் தொடை ஆயிற்று.

ஒரூஉ முரண் தொடை:-எ.டு:-
பெருமை விளங்கப் பிறவெலாம் சிறிதாய்

பெருமை - சிறிது என்று முதல், நான்காம் சீரில் வந்ததால் ஒரூஉ முரண் தொடை ஆனது.

கூழை முரண் தொடை:-

எ.டு:-
பைந்தார் செங்கண் கார் மேனி வண்ணன்

பை- பசுமை
செங் - சிவப்பு
கார் - கறுமை
என்று மூன்று சீர்களிலும் முரண் தொடை வந்ததால் கூழைத்தொடை ஆயிற்று.

மேற்கதுவாய் முரண் தொடை:-

எ.டு:-
உவந்தனன் உலகோர் மலைத்தனர் அஞ்சி

- உவந்து, மலைப்பு, அச்சம் என்று 1, 3, 4 சீர்களில் வந்ததால் மேற்கதுவாய் முரண் தொடை ஆயிற்று.

கீழ்க்கதுவாய் முரண் தொடை:-

எ.டு:-
வலம்பெறும் இடத்தனாய் மன்னன் கீழுற

- இதில் வலது, இடது, கீழ் என்று மூன்றாம் சீர் தவிர ஏனையச்சீர்கள் முரணாக வந்ததால் கீழ்க்கதுவாய் ஆயிற்று.

முற்று முரண் தொடை:-

எ.டு:-
வடபால் தென்பால் மேற்பால் கீழ்பால்

- இதில் 4 சீர்களிலும் முரண் முறையே வட, தென், மேல், கீழ் என்று வந்ததால் முற்று முரண் தொடை அமைந்ததாயிற்று.

No comments: