Thursday, March 31, 2005

ஏ! மனிதா!

இன்னும் நீ
ஆடை உடுத்திய
ஆதிமனிதன் தான்!

ஏனெனில் உடைகளணிந்தும்
கூட உடலியல் கூறு காண்கிறாய்!

மிருகங்கள்
உடைகள்
அணிவதுமில்லை!
அவிழ்த்து
அவமானப்படுத்துவதுமில்லை!

ஜீன்சு உடுப்புகள்
ஜீன் பரிணாமத்தை
புதுப்பிக்காதது ஏன்?

இன்னும் நீ
வேட்டையாடும்
ஆதிமனிதன் தான்!

அன்று மிருகங்களை!
இன்று மனிதர்களை!

அழிப்பாய்
அன்றேல்
அழிக்கப்படுவாய்
எனும் கால்
அழிக்கப் புறப்பட்டவன் நீ!

இன்னும் நீ
உயிர் புசிக்கும்
ஆதிமனிதன் தான்!

அன்று பச்சையாய்
இன்று பக்குவமாய்

அஞ்ஞானம்
ஆடும் மட்டும்
விஞ்ஞானம்
விரிந்தென்ன பயன்?

உன் ஆதிக்க
ஆணவத்தை
அவை
வெளிச்சம்
போட்டதுதான் லாபம்!
அவை
இழந்த உயிர்களையா
திருப்பித்தரும்?

உன் மூதாதை
உரைக்குமட்டும்
உனக்குத்தெரியாது
நீ
ஆறறிவுப்பிராணி என்று!

தெரிந்து தான் என்ன?
மனிதனாகவா இருக்கிறாய்?

வயிற்றில் அடித்து
வாயை நிரப்புகிறாய்
என்றேனும் உன்
மனம் நிறைந்ததுண்டா?

மனம் இருந்தால் தான்
நீ
மனிதன்

எப்படி அறிவாய் பாவம்!
உன் கோரைப்பற்கள்
கிழித்ததெல்லாம்
இதயங்கள் தானே!

Wednesday, March 30, 2005

இது நம் புராதன வீடு!

ஒழுகும் கூரைகளை
சரி செய்வோம்
அழுகும் பிள்ளைகளை
சிரிக்கச் செய்வோம்

தொங்கும் ஒட்டடைகளை
துவட்டி எடுப்போம்
எங்கும் சுத்தமாய்
இருக்கச் செய்வோம்

கோப்புகளை எல்லாம்
தூசு தட்டுவோம்
கலைந்த புத்தகங்களை
அடுக்கி வைப்போம்

கிழிந்த திரைச்சீலைகளை
நீக்கி விடுவோம்
கறை படிந்த தரையை
துடைத்து எறிவோம்

விரிசல் சுவர்களை
இணைத்து வைப்போம்
பழுதை எல்லாம்
புதிது செய்வோம்

இது நாம் புதுப்பித்த வீடு!

நினைவுப் பரிசுகளை
நிமிர்த்தி வைப்போம்
புகைப் படங்களை
மாட்டி வைப்போம்

பூக்களை ஆங்காங்கே
செருகி வைப்போம்
நறுமணம் எங்கும்
பரவச் செய்வோம்

பழையன யாவையும்
பாது காப்போம்
புதியன வற்றிற்கு
அங்கீகாரம் அளிப்போம்

இது தோட்டம் சூழ்ந்த வீடு!

தோட்டமும் இணைந்தது
நம் வீடு!
அனுதின மலர்கள்
தனியே!
சுவை தரும் கனிகள்
தனியே!
மருத்துவ மூலிகைகள்
தனியே!
பருவ காலப் பயிர்கள்
தனியே!
ஒவ்வொன்றும் ஒரு வகை!
அத்தனையும் தரும் உவகை!

இது நம் எழில் வீடு!

மலர்ச் செடிகளை
வாசலில் வைப்போம்

மாவிலைத் தோரணங்கள்
கட்டி வைப்போம்

மரங்கள் அரணாய்
வலுச் சேர்க்கும்

கருவேலமும் வேலியாய்
துணை நிற்கும்

எதுவும் இங்கே
வீண் இல்லை!

இது மைதானம் தாங்கிய வீடு!

இது குழந்தைகளும்
விளையாடும் வீடு!
தெரு நாய்களை
உள்ளே அனுமதியோம்
வாசல்களை பலமாய்
பூட்டி வைப்போம்
ஆபாசச் சுவரொட்டிகளை
கிழித்தெறிவோம்
யாவரிடத்தும் நாகரிகமாய்
நடந்து கொள்வோம்
இது நம் பண்பாடு
பறைச் சாற்றும் வீடு!

இது நம் ஜன நாயக வீடு!

ஆலோசனைகள்
ஆயிரம் அங்கீகரிப்போம்
தீர்வு ஒன்றாய்
தீர்மானிப்போம்

புதுமைகள் பலவாய்
புரிந்திடுவோம்
செம்மையாய்
செழுமை சேர்த்திடுவோம்

குறைகள் கேட்டு
நிவர்த்தி செய்வோம்
நிறைகள் கண்டு
பயன் பெறுவோம்

இது நம் ராஜ்ய வீடு!

ஒரே தலைவனின் கீழ்
ஒற்றுமையாய் வாழும்
இது நம் ராஜ்ய வீடு!

என்னை விட்டுப் போ..

ரிக்டர் அழுத்தம்
நானோ வேகம்
சதவீத ஊக்கம்
இருந்தும் இல்லை ஆக்கம்
'பிறகு பார்க்கலாம்' எனும்
பாரன்ஹீட் சோம்பலே!
என்னை விட்டுப் போ..
கவிதை மழை
என்னில் இறங்கிவிட்டது.

Tuesday, March 29, 2005

தையலின் தையல்

கண்களைத்திறந்தாலும் நீ!
கண்களை மூடினாலும் நீ!
நினைவுச்சிதறலினால்
நேற்று காபியில் உப்பு!
இன்று சாம்பாரில் சர்க்கரை!
என் புத்திக்குள் நின்று
ஆடுகிறாய் சடுகுடு!
மன பரப்புகளை
ஆக்ரமிக்கிறாய் மா வீரனாக!
சொல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
தொண்டைக்குள் தைத்த
மீன் முள் செருகலாய்..
தைத்துக்கொண்டது
இதயம் மட்டுமல்ல
குரல் வளையும் தான்!

நீ வருவாய் என!

எனக்கு
ராமனையும் தெரியாது!
சீதையையும் தெரியாது!

உனக்காக காத்திருக்கிறேன்
நான் நானாகவே!

என்றாவது வா!
நீ நீயாகவே!

நட்பே!

துணை கிடைத்ததும்
தனை மறந்தது
ஒரு நட்பு!

துணை கிடைக்காததால்
நீ என்றது
இன்னொரு நட்பு!

துக்கத்தை மறைத்தது
ஒரு நட்பு!
நான் துக்கப்படுவேன் என்று!

பொய் சந்தோசம் காட்டியது
நான் துக்கப்படக்கூடாது என்று
இன்னொரு நட்பு!

நட்பே!
உண்மையை உண்மையாக
ஏற்றுக்கொள்ளத்தான் நீ!

துக்கத்தை ரெண்டாக்கி
இன்பத்தை ரெட்டிப்பாக்காவிட்டால்
பிறகு நான் எதற்கு?

தோற்றாலும் ஜெயித்தாலும்
தோள் கொடுக்கத்தான் நான்!

மறுக்கவும் மறைக்கவும்
இதில் என்ன இருக்கிறது?

பட்டாம்பூச்சி

கண்ணீர் வடிந்த
ஒரு ராத்திரியின்
வெளிச்சத்தில்

கண்கள் சிவந்து
நாளை என்ற
நம்பிக்கையை இழந்து
உயிரைத் துறந்து
யுத்தத்திற்கு
புறப்பட்ட தருணத்தில்

இன்றைய நிமிடத்தை
முழுமையாய்
அனுபவிக்கும்பொருட்டு
நேற்றைய பொழுதுகள்
தொலைந்தே போயிருக்கும்!

ஆனாலும் பாசப்பூக்கள்
ஒட்டிக்கொள்ளும் போது
நெஞ்சப்பட்டாம்பூச்சி
சிறகடிக்காமலில்லை!

Monday, March 28, 2005

என்னருகில் நீ

காயும் நிலவு
கலையா வானம்
என்னருகில் நீ

பனி கொஞ்சும் முகில்
நனி துஞ்சும் மலை
என்னருகில் நீ

ஒற்றைக் கிளை
இரட்டைக் கிளி
என்னருகில் நீ

பாயும் அலை
பரவா விரல்கள்
என்னருகில் நீ

மஞ்சள் விரவும் மாலை
இமை அகலா பார்வை
என்னருகில் நீ

துடிக்கும் விரல்கள்
தூங்கும் கை
என்னருகில் நீ

நனையா முத்தம்
நினைந்த கனவு
என்னருகில் நீ

நீ ஒரு...

நீ ஒரு வானம்
நினைக்கும்போது வெளிச்சம்
மறக்கும்போது இருள்

நீ ஒரு ரோஜா
நினைக்கும்போது மணம்
மறக்கும்போது முள்

நீ ஒரு பரமபதம்
நினைக்கும்போது ஏற்றிவிடுவாய்
மறக்கும்போது கொத்திவிடுவாய்

நீ ஒரு குழந்தை
நினைக்கும்போது கொஞ்சுவாய்
மறக்கும்போது கெஞ்சுவாய்

நீ ஒரு விண்மீன்
நினைக்கும்போது ஒளிர்வாய்
மறக்கும்போது உதிர்வாய்

நீ ஒரு படகு
நினைக்கும்போது பயணம்
மறக்கும்போது பணயம்

நீ ஒரு மலை
நினைக்கும்போது எழுவாய்
மறக்கும்போது எழுவாய்

நீ ஒரு காடு
நினைக்கும்போது காணாமல்போவேன்
மறக்கும்போது கண்டுகொள்வேன்

நீ ஒரு உண்மை
நினைக்கும்போது தெரியும்
மறக்கும்போது தெரியாது

நீ ஒரு பொய்
இருந்தும் இருப்பாய்
இல்லாமலும் இருப்பாய்

Sunday, March 27, 2005

நிமிர்ந்து பறந்திடு!

ஆணிவேர்கள் நாங்கள் என்றே
கொடிமரமே நீ
நிமிர்ந்து நின்றிடு!

உழைப்பால் நாங்கள்
கயிறுகள் தருவோம்
உயரத்தில் நீ நிமிர்ந்து நின்றிடு!

கக்கும் தீக் காவிக்கு
காவு ஆனாலும்

வெள்ளம் எங்களுக்கு
வெள்ளை அடித்தாலும்

பிச்சை அளிக்கும் மழை
பச்சை தந்தாலும்

எங்கள் நெஞ்சுறுதி
ஏந்தி நீ
நிமிர்ந்து நின்றிடு!

ஏ!
அசோக சக்கரமே,
உன் காலுக்கு
வலியெடுத்தால்
எங்கள்
கண் மணி
பொருத்திடுவோம்!

வேலை தேடும்
எங்கள்
இளைஞர்களின்
முயற்சியைப் போல்
நீ
ஓயாது சுழன்றிடு!

வாழ்க்கை முழுதும்
எங்களின் தேடல் போல
ஓயாது சுழன்றிடு!

எங்கள் சுதந்திரத்தின் உடையே!
வல்லரசு ஆவோம்
என்ற நம்பிக்கை
இசையை
காற்றுக்குச் சொல்லி
ஆனந்தமாய் பறந்திடு!

என்ன பயன்?

ஐந்திரு திங்கள் சுமந்த பொழுதிலும்
அரைவயிற்றோடு உணவிட்ட பொழுதிலும்
அண்ணாந்து இடுக்கிப் பார்க்கும் பொழுதிலும்
நினைக்கவில்லை அவள்..
இவனால் என்ன பயன்?

வைரம் பாய்ந்த தேகம்
வளமான வாழ்க்கை
வாழ்த்துமளவு புகழ்
இருந்தும் கேட்கிறாய் நீ
இவளால் என்ன பயன்?

இறந்த பின்பூமி கேட்கிறது
இவனால் என்ன பயன்?

செல்லமே செல்லம்

பத்து திங்கள் பார்த்திருந்து
பாங்காய் வந்த பசுங்கிளியே!

சிரிக்கும் பொன் பூவோ..
சிவந்த குளிர் தீயோ...

எங்கள் சிங்காரச் சிட்டே!
ஆழியில் ஊறிய முத்தே!
நான் தானடி உனது அத்தே!

கொத்து கொத்தாய் ஆசை வச்சேன்
உன்னை நானும் காண்பதெப்போ?

முத்து முத்தாய் சொல் தொடுத்து
முனைப்பாய் நானும் பாட்டெடுப்பேன்

தெள்ளு தமிழ் சொல்லெடுத்து
என்னை நீயும் விளிப்பதெப்போ?

உன்னைப்பெற்றெடுத்த சொந்தங்களுக்கோ
பத்து திங்கள் பரவசம்...

பார்க்காத இச்சொந்தங்களுக்கோ
பார்க்கும் வரை பரவசம்..

தத்தி தத்தி நடந்து வந்து
அத்தை அத்தை என்னும்
அந்த நாளுக்காக காத்திருக்கேன்..
அஞ்சுகமே ஓடி வா...

Saturday, March 26, 2005

நிலவே! நிலவே!

நீ ஏன் கலங்குகிறாய்?
கலைந்து ஓடும்
மேகத்துக்காக ஏன்
கண்ணீர் வடிக்கிறாய்?

வானம் தான் உன்
வைப்பறை என்றால்
அது ஒன்றும்
சிறை இல்லையே!

நாளும் தாங்கும்
வானத்திற்கு நன்றி சொல்லிடு!
மறைத்தற்காக மேகத்திற்கும்
நன்றி சொல்லிடு!

இருளும் கொஞ்சம்
இருக்கட்டுமே உலகுக்கு!

களங்கம் உனக்கு
திருஷ்டிப் பொட்டு!
கவலை அதற்கேன்
வருத்தப் பட்டு?

தண்ணொளி எங்கும்
வீசிக்கிட்டு!
தவழ்வாய் பூமியை
சுற்றிக்கிட்டு!

உணர்வுகளோடு

கனன்றுகொண்டிருக்கும்
தீப்பிழம்பின் மேற்சாம்பலில்
நம் புன்னகை பூக்கள்
கருகாமலிருக்கின்றன!

என் இதயத்தை நானே
அறுவைசிகிச்சை
செய்து கொள்ளும் பொருட்டு
பார்வையாளனாக
வந்துபோகிறாய் அவ்வப்போது!

சிறுக சிறுக
சேர்த்துவைத்து
கட்டிய கோட்டையை
செல்லரிக்கச்செய்து
அதன் ஓட்டைகளில்
காற்று வாங்கிக் கொள்கிறாய்!

ஆறவிட்ட ரணத்தின்
அடித்தளத்தை
சொறிந்துபார்த்து
உயிரோடிருப்பதை
உறுதி செய்து கொள்கிறாய்!

எழுதி வையுங்கள்
என் கல்லறையில்...

"உயிரோடிருக்கும்போதே
உணர்வுகளோடு
புதைக்கப்பட்டவள்" என்று!

வித்தியாச ஏகலைவன்

விழிகளால் பேசும்
வித்தையை கற்றுத்தந்தேன் - அதற்காக
அண்டத்தை அளக்கும் உன்
அகண்ட விழிகள் வேண்டாம்

மனிதம் வளர்க்க
மணி நூறு பேசினோம் - அதற்காக
மானுடத்தை சுவாசிக்கும் உன்
மல்யுத்த மார்புகளும் வேண்டாம்

பூ நோகாமல்
பூப் பறிக்க கற்றுத்தந்தேன் - அதற்காக
பூவொன்றை ஏந்தி வரும் உன்
கைச்செண்டும் வேண்டாம்

ஆனால்

என்னை மட்டும் தாங்கும்
உன் நெஞ்சத்தை மட்டும்
முழுதாய் தந்துவிடு! - ஏனென்றால்

நேசிக்கக்கற்றுத் தந்துவிட்டு
நெஞ்சத்தைக் கேட்கும்
வித்தியாச ஏகலைவன் நான்!

Tuesday, March 22, 2005

இது குழந்தை பாடும் தாலாட்டு!

வெள்ளி நூல் சூடிய விடிவெள்ளியே!
மூக்குத்தி அணிந்த முழு நிலவே!
உன் பாத மென்மை காண
சந்திரன் மிதியடி ஆகுமம்மா!
தன்னை உருக்கி நகைகள் செய்ய
சூரியனும் உலைகள் ஓடுமம்மா!

உன் கை அகலம் கண்டு நாணித்தான்
கடல்களும் பூமியின் கரையில் ஒதுங்கினவோ!
காணாத துயரத்தில் தான்
அலைகளும் மோதி தவித்தனவோ!

எனக்கும் ஒரு வாய்ப்பு கொடு!
பிள்ளை! வரம் கேட்கிறேன் - நீ
பிள்ளையாகும் வரம் கேட்கிறேன்!

பாதபூஜை செய்துத்தான் என்
பாவங்களை போக்கிடுவேன்!
கண்ணின் இமையாய் இருந்துதான்
கருத்தாகக் காத்திடுவேன்!
தாய்க்கு தாயாய் இருந்து தான்
உன் மறுபிறப்பை காட்டிடுவேன்!

மருதாணி இட்டு அழகு பார்த்த
இந்த
மகராசி கைகளுக்கு பூக்களின் புல்லிகள்
கூட உறுத்திட விடமாட்டேன்!

இரவு பகல் பாராமல்
உழைத்து உழைத்து
இளைத்திட்ட தேகத்தை
நோகாமல் தாங்கிடுவேன்!

பணியாட்கள் பலர் இருந்தும்
பக்குவமாய் சமைத்திடுவேன்!
பதம்பார்த்து சுவை சேர்த்து
நேரம் தவறாமல்
மருந்தோடு பழங்களையும்
கசக்காது ஊட்டிடுவேன்!

கண்ணில் புள்ளிகள்
விழுந்து விட்டால்
பாவையாக மாறிடுவேன்!
விரும்பும் நூலையெல்லாம்
வாசித்தே காட்டிடுவேன்!

தூக்கம் கண்களை தழுவும்போது
உன் தாலாட்டை பாடித்தான்
ஊஞ்சலில் இதமாய்
தூங்கவைப்பேன்!

தோட்டத்தில் கூட துருத்தாத
புல்வெளி நடைபாதை விரித்திடுவேன்!
பேரக்குழந்தைகள் விளையாட
பூங்கா அமைத்து கொடுத்திடுவேன்!

சோறூட்ட எனக்காக
தூரத்தில் காட்டிய
அம்புலியை
ஆறேழு மாடி கட்டி
அருகமரச்செய்திடுவேன்!

நீ விரும்பும் யாத்திரைக்கு
கம்பளி போர்த்தி
அழைத்துச்செல்வேன்!

உன்
மூச்சு வாங்கும் மூட்டுகளுக்கு
மடிச்சுமைதாங்கி ஏந்திடுவேன்!

எனக்கும் ஒரு வாய்ப்புகொடு!
பிள்ளை! வரம் கேட்கிறேன்!
நீ
பிள்ளையாகும் வரம் கேட்கிறேன்!

Sunday, March 20, 2005

மாய வித்தை

என்ன என்ன மாயம் இது?
என்னில் நானே கண்டுகொண்டேன்
அனுமதியின்றி வெளியேறியது
எந்தன் நெஞ்சம்
அனிச்சையாய் உள்ளே வந்தது
உந்தன் நெஞ்சம்
கண்கள் பேசியது
இதயம் சிரித்தது
காட்சிகள் இல்லாமல்
கண்கள் பார்த்தன
ஆட்கள் இல்லாமல்
உதடுகள் பேசின
ஒன்றும் இல்லாமல்
கைகள் புரிந்தன
இலக்கே இல்லாமல்
கால்கள் நடந்தன
"அதனதன் வேலையை
அது அது செய்யாமல்
இது என்ன?" என்று
நான் அதட்ட
"நீ மட்டும் என்ன?" என்று
கேலியாய் சிரித்தன - நீ
செல்லும் திக்கில் எல்லாம்
சொல்லாமல் நடந்தேன்
விலகிய போது அலுத்தேன்
பேச விட்டு ரசித்தேன்
வினா கேட்ட போது
விடைக்காக தவித்தேன்
பிடித்ததை பிடிக்காது என்றும்
பிடிக்காததை பிடித்தது என்றும்
மாற்றி மாற்றி உரைத்தேன்
தொடர்ந்து தொடர்ந்து உன்
நிழலைப் பிடித்து
மனதைப் படித்தேன்
பிறகு தான் தெரிந்தது
அதில் நான் இல்லையென.

Saturday, March 19, 2005

எப்போது வரும்?

அலரும் அலாரத்தை
அமட்டிய பின்னும்
அலுக்காத மஞ்சம்!

பல் துலக்காமல்
படுக்கைக் காபி!

மெத்தை விரிப்பில்
நாளிதழ் கொறிப்பு!

அன்னையின் கைவரிசையில்
நல்லெண்ணெய் முழுக்கு!

"சோம்பேறிக்கழுதை" தூபத்துடன்
சாம்பிராணிப்புகை தலை வாரல்!

உதவிசெய்யும் தோரணையில்
வறுக்காத முந்திரியும்
துருவிய தேங்காயும்..

உப்புப்பார்க்கும் சாக்கில்
ஒத்திகை சாப்பாடு!

பார்க்காத தோழிகளிடம்
தொலைபேசி அரட்டை!

நையாண்டிக்காகவே
தொலைக்காட்சித் தொடர்கள்!

ஆறுநாள் அனாதை
'மொட்டை'மாடிக்கு
வார இறுதியில்
வாண்டுகளுடன்
வட்ட மேசை
'கூந்தல்' அலங்காரம்!

கூடடைந்த குருவியும்
குனிந்து வாங்கும்
உருண்டைப்பிடி
நிலாச்சோறு!

தூங்கிய பின்னும்
நெஞ்சின் மீது
மூச்சு வாங்கும்
புத்தக பக்கங்கள்..

படபடக்கும் நாட்காட்டியிடம்
சுழலும் காற்றாடி கேட்டது
எப்போது வரும்....
அடுத்த ஞாயிறு?

Thursday, March 17, 2005

கூன் விழுந்த குமரிகள்

வரதட்சணை வம்சத்தில்
வந்து விழுந்த
சினைக்குஞ்சுகள் நாங்கள்

கள்ளிப்பால் புகட்டும் காட்டில்
கன்றுப்பால் தாய்ப்பாலானதால்
தப்பிப்பிழைத்தோம் நாங்கள்

சா(ஆ)ண்பிள்ளை வாரிசுக்காய்
வரிசையாய்ப் பிறந்ததால்
கூலிக்கூழ் குடித்தோம் நாங்கள்

அப்பிள்ளை அழகாய் போக
தப்பில்லை அழுக்கானாலும்
அடுப்புக்கரி யானோம் நாங்கள்

சுள்ளிக்குச்சி கொண்டாறேன் ஆத்தா
சுல்லென சுடும் வெய்யிலில்
அடுப்பெரிக்க சுட்டோம் நாங்கள்

அஞ்சு நாள் நிதம் போனா
அச்சுவெல்ல உருண்டை தருவாங்களாம்
பள்ளிக்கூடம் பார்த்தோம் நாங்கள்

ஒண்ணே ஒண்ணு! எங்க
கண்ணே கண்ணு!
கருவேப்பிலை கொத்தேனு
தம்பிய கொஞ்சினாங்க..
கெஞ்சவில்லை நாங்கள்

பத்தாப்பு படிச்சா போதும்
படிச்சவன் யாரு இருக்கா?
பொங்கிப்போட படிப்பெதுக்கு?
சீர் செய்ய செலவெதுக்கு?
பொங்கவில்லை நாங்கள்!

கண்ணுக்குள்ளே வச்சிருப்பேன்
கண்மணியே உன்னை நானும்!
கண்ணாளன் சொன்னாலும்

அரைவயறுக் கஞ்சி ஊத்தி
அஞ்சுபவுன் சங்கிலிபோடும்
அப்பன் பார்த்த மாப்பிள்ளை
தான் நிமிர்ந்து பாரோம் நாங்கள்!

சாதிக்கிளை ஒடிச்சி
புங்கம்பூ பூத்தாலும்
ஓடிவரும் ஒருதண்ணி
செம்மண், களிமண்
கலந்தாலும்
நட்புத்தூண்கள்
நாற்புறமும் காத்தாலும்
வீட்டின் கூரை தாங்கி
சுவர்களாய் இருப்போம் நாங்கள்

மூலையில் இருப்போரை
மூளைச்சலவை செய்தாலும்
கோபக்கோஷங்கள் கொண்டு
கொதித்தே எழுந்தாலும்
சுற்றும் உள்ள பூமி
சற்றே உயர்ந்தாலும்
மௌன ஓட்டுக்குள்ளே
மறைந்தே இருப்போம் - நாங்கள்

குனிந்து குனிந்தே
கூன் விழுந்த குமரிகள்.