Thursday, March 31, 2005

ஏ! மனிதா!

இன்னும் நீ
ஆடை உடுத்திய
ஆதிமனிதன் தான்!

ஏனெனில் உடைகளணிந்தும்
கூட உடலியல் கூறு காண்கிறாய்!

மிருகங்கள்
உடைகள்
அணிவதுமில்லை!
அவிழ்த்து
அவமானப்படுத்துவதுமில்லை!

ஜீன்சு உடுப்புகள்
ஜீன் பரிணாமத்தை
புதுப்பிக்காதது ஏன்?

இன்னும் நீ
வேட்டையாடும்
ஆதிமனிதன் தான்!

அன்று மிருகங்களை!
இன்று மனிதர்களை!

அழிப்பாய்
அன்றேல்
அழிக்கப்படுவாய்
எனும் கால்
அழிக்கப் புறப்பட்டவன் நீ!

இன்னும் நீ
உயிர் புசிக்கும்
ஆதிமனிதன் தான்!

அன்று பச்சையாய்
இன்று பக்குவமாய்

அஞ்ஞானம்
ஆடும் மட்டும்
விஞ்ஞானம்
விரிந்தென்ன பயன்?

உன் ஆதிக்க
ஆணவத்தை
அவை
வெளிச்சம்
போட்டதுதான் லாபம்!
அவை
இழந்த உயிர்களையா
திருப்பித்தரும்?

உன் மூதாதை
உரைக்குமட்டும்
உனக்குத்தெரியாது
நீ
ஆறறிவுப்பிராணி என்று!

தெரிந்து தான் என்ன?
மனிதனாகவா இருக்கிறாய்?

வயிற்றில் அடித்து
வாயை நிரப்புகிறாய்
என்றேனும் உன்
மனம் நிறைந்ததுண்டா?

மனம் இருந்தால் தான்
நீ
மனிதன்

எப்படி அறிவாய் பாவம்!
உன் கோரைப்பற்கள்
கிழித்ததெல்லாம்
இதயங்கள் தானே!

No comments: