Thursday, September 22, 2005

நிழலும் நானும் - ஒரு விளையாட்டு

நான் பிறக்கும்முன்பே
பிறந்துவிட்ட நிழலே...
என் மீது தான்
எத்தனை பிரியம் உனக்கு!
இருக்கும்போதும்
நடக்கும்போதும்
உறங்கும்போதும் கூட
விழிப்புடன்
என்னுடன் நீ....
நீ மட்டும்!
கடுகுக்கும் கடலுக்குமாய்
நமது போட்டி
நான் எழும்முன்பே
நீ நிற்கிறாய்
நான் நிற்கும்போதோ
ஓடுகிறாய்
உன் ஓட்டத்தைப் பிடிக்க
ஓடி ஓடி
நான் களைத்தேன்.
களைத்தபோதும்
உன் நிழலில்
கொஞ்சம் திளைத்தேன்.
ஆனாலும் நீ
அசரும்போது
அசத்திப்பார்ப்பதில்
ஆனந்தம்தான் எனக்கு!
நான் பலமாய் நிற்கையில்
என் காலடியில் நீ!
கர்வம்தான் எனக்கு...
உன்னை ஒரு நாளாவது
என் காலடியில் போட்டு
மிதித்துவிட மாட்டேனா என்று!
நீ
ஓடும் வேகத்தில்
நானும்
அசுரமாய்....
விரைகையில் விரிகிறாய்
விரிகையில் விரைகிறாய்
நீ நினைக்கும்முன்
நான் நிற்க
போட்டி தான் நமக்குள்.
நேற்று நான்.
இன்று நீ.
மாறி மாறி நமக்குள் வெற்றி.
உன்
களைப்பைப்பார்க்கும் வெறி
எனக்குள் எழுந்தபின்
நான் சளைக்கவே இல்லை.
உன் வேகம் கூட
எனக்கு சவால் தான்.
உன் முடக்கம் கூட
எனக்கு வேதனை தான்.
ஏனெனில்
நீ ஓடுவதாலேயே
நானும் ஓடுகிறேன்.
உன்னுடன் ஆடும்
ஆட்டத்தினாலே
எனது வாசலும் நீள்கிறது.

Thursday, September 01, 2005

நல்லதோர் வீணையே!

எந்தன் வீணையே!
வீணாய்ப் போனதேனோ?
நகரும் போதை மாயைக்குள்
உன் தந்திகள் புதைந்துப் போயினவோ?

நீ சுரத்தையின்றி சுருண்டால்
நற்சுரங்கள் அழாதோ?
காய்ச்சலுக்காக மருந்துண்ணலாம்.
மருந்தே உணவானால்...?
அது உன்னை உண்டுவிடாதா?

வாழ்க்கையில் களிப்புகள் இருக்கலாம்.
களிப்பே வாழ்க்கையானால்
எதிர்காலம் என்னாவது? நீ
மிச்சமின்றி துய்த்த எச்சத்தில்
மிஞ்சிக்குப் பூசைகளா?

நாளைய அரை நாள்
இன்றைய ஒரு நாளுக்குச் சமமாம்.
களித்தது போதும்.
இன்றே எழுந்திரு!
உன்னிடமுள்ள சுரமே
சுரத்தை ஓட்டும் மருந்து.

நீ மீட்ட மீட்ட
தூசுகள் தானே ஓடிவிடும்.
உன் சுரம் நான் கேட்கிறேன்.
நல்லதோர் வீணையே!
புழுதியில் கிடக்காதே!