Monday, April 10, 2006

குழந்தைகள் தினம்...

குழந்தைகள் தினம்...

நேருஜி பிறந்த நவம்பர் 14 - குழந்தைகள் தினம்...

காலையில் பள்ளி எப்போதைய நாளை விடவும் களை கட்டியது.

வகுப்பறையில் அலமாரி முழுவதும் பொம்மைகளாக நிறைந்திருந்தன. ரெட், புளூ, பிங்க், கிரீன், யெள்ளோ ஹவுஸ் குழுக்களின் அடிப்படையில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வேலையாக பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலில் வகுப்பறையிலுள்ள டெஸ்க், பெஞ்ச் அனைத்தும் ஒரு குழு அப்புறப்படுத்தியது. இன்னொரு குழு நீரூற்றி வகுப்பறையை சுத்தம் செய்தது.

அலங்கரிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. கொண்டுவந்த பொம்மைகள், வகுப்பறை ஆவணங்கள், கோப்புகளை பாதுகாக்கவும், வேறு வகுப்புப் பிள்ளைகள் எங்கள் வகுப்பில் நடப்பதை அறியாவண்ணம் பாதுகாக்கவும் இன்னொரு குழு நியமிக்கப்பட்டது.

கரும்பலகையில் கலைமகளின் ஓவியத்தை ஒருத்தி வரைய, ரோஜா இதழ்களால் வாசலில் நேருவின் உருவப்படத்தை இன்னொருவர் வரைய பெஞ்ச் மீது பெஞ்ச் போட்டு சாட், கலர் பேப்பர் ஒட்ட என்று ஆளுக்கொருவராக வேலைகளை எங்கள் குழுவில் ஆரம்பித்தோம்.
வகுப்பிலுள்ள அனைவரது பொம்மைகளுமாக சேர்ந்து ஒரு சிறிய குன்று போல பொம்மைகள் இருந்தன. யாருடைய பொம்மைகள் யாருடையவை என்பதைக் கண்காணிப்புக்குழுக்கள் பெயர், எண்ணிக்கையுடன் ஒரு பட்டியல் தயார் செய்து வைத்திருந்தனர். இதனால் எங்களுக்கு அவைகளைப் பிரிப்பதும் மீண்டும் அவர்களுக்கு திருப்பிக்கொடுக்கவும் வசதியாக இருந்தது.

கொண்டுவரப்பட்ட பொம்மைகளில் ஒரே ரகமாக இருந்த பொம்மைகளை எல்லாம் தனித்தனியாக நான் பிரித்தெடுத்தேன். அதாவது, வாகன பொம்மைகளை எல்லாம் தனியாக, கடவுள் உருவ பொம்மைகள் தனியாக, விலங்குகள், செடிகள், மீன்கள் போன்ற பொம்மைகள் தனியாக என்று வகைப்படுத்தினேன். மீதி பொம்மைகள் பெஞ்ச், டெஸ்க்குகளை அடுக்கிவைத்து நவராத்திரி கொழு போல பொம்மைகள் வரிசையாக படிகளில் அடுக்கிவைக்கப்பட்டன.

மஞ்சு, சொன்னபடி களிமண்ணும், பிள்ளையார் பொம்மையும் கொண்டுவந்திருந்தாள்; அதை மலையாக்கி மலையில் பிள்ளையாரை அமர வைத்து படிகள் செய்து அடிவாரத்தில் ஆறு அமைத்து ஆர்க்கிடெக்சர் பொம்மைகளால் அணை செய்து சுற்றிலும் செடிகள் வைத்து நிரப்பினோம். மயில், மான், புறா ஆங்காங்கே நிற்பது போல, பறவைகள் பறப்பது போல அவற்றில் அழகாக பொருத்தி வைத்தோம்.

அணையின் அடியில் தண்ணீர் நிரப்பி களிமண்ணால் கரைகள் கட்டி பல வண்ண பிளாஸ்டிக் மீன்களை அதில் விட்டு கரையில் ஒரு மீனவ பொம்மையைக் கையில் தூண்டிலோடு அமரவைத்தோம். சின்ன சின்ன பூக்களால் ஒட்டவைத்து பச்சைவண்ணத்தாளை மெல்லியதாக நறுக்கி புல்வெளி அமைத்து அவற்றில் நிஜக் கொடிகளைப் படரவிட்டோம்.

அதனருகே வரிசையாக செல்லும் ரயில்பெட்டிகளை அடுக்கி கீ கொடுத்தால் ஓடும் தண்டவாளத்தின் மீது அமைத்து ரயில் நிலையமும், பஸ் பொம்மைகளைக்கொண்டு பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டது. அட்டைப்பெட்டிகளாலும் செங்கற்கல்லாலும் அடுக்கிவைத்து காவல் நிலையத்தின் முன்புறத்தை மட்டும் உருவாக்கி இருந்தோம். சாக்பீஸால் வட்டம் போட்டு அதனுள் விமான பொம்மைகளை நிற்கவைத்து விமான நிலையமும் தயார் ஆனது.

மற்றொரு புறம் ஸ்கூட்டர், கார், லாரி பொம்மைகளை வரிசையாக அடுக்கி ஒரு சிலவற்றை மட்டும் ரோடில் செல்வதுபோல சாக்பீஸால் ஆன ரோட்டில் நிறுத்தினோம். ஆங்காங்கே டிராபிக் சிக்னல் ஸ்டேண்டுகளையும் ஸ்கேலின் உதவியால் நிற்கவிட்டோம்.
மலைப்படிகள் காய்ந்ததும் புனிதா அவளது அகல் விளக்குகளை ஏற்றிவைத்தாள். மற்ற கடவுள் சிலைகளைக்கும் ஆங்காங்கே தெர்மோகோலில் செய்த கோபுரத்தின் வாசலில் கோலங்கள் இட்டாள். ஊதிபத்தியும், மலர் மாலைகளும் கொண்டு ஷீலா அலங்கரித்தாள்.
பெண்கள், குழந்தைகள் போன்ற ஆளுருவ பொம்மைகளையும் கோயில் பிரகாரத்தில் ஆங்காங்கே ஜீடி நிற்க வைத்தாள்.

அலமாரியில் புத்தகங்கள் ஒருபுறம் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டு திடீர் நூலகமாக மாறியது. பிளாஸ்டிக் காய்கறிகள், பழங்களை ஒரு கூடையில் அடுக்கி வைத்து இன்னொருபுறம் 'திடீர் சந்தை' முளைத்தது. சுவரின் ஒருபுறத்தில் தேசியத் தலைவர்கள் படமும், மற்றொரு புறம் பாடநூல், உலக வரைபடங்கள், இன்னொரு புறம் நாங்கள் வரைந்துவந்த படங்களையெல்லாம் வரிசயாக மாட்டினோம். அங்கங்கு தெரிந்த மீதி சுவர் பாகங்களையும் கலர் ஜரிகைத்தாள்களால் அலங்கரித்தோம். வகுப்பின் நடுவில் கண்ணாடிவிளக்கு மாட்டப்பட்டது. நுழைவு வாயில் சுவர்கள் பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாசலிலும் மலர்க்கோலங்கள், கலர்ப்பொடிகளால் ரெங்கோலி போடப்பட்டது.

இந்திய வரைபடத்தை நடுவில் வரைந்து தேசிய ஒற்றுமையைக் குறிக்கும்வண்ணம் ஒவ்வொரு மாநிலத்தின் நடுவிலும் அந்தந்த கலாச்சார முறைப்படி ஆடையணிந்த மாணவிகளை நிற்கவைத்தோம். கொழுப்படியின் அடியில் டேப் ரிக்கார்டர் மங்கல இசைத்தட்டோடு தயாராக வைக்கப்பட்டிருந்தது. இவையனைத்தும் மற்ற வகுப்புகளுக்கு துளியும் சென்று சேராவண்ணம் மிக கவனமான பாதுகாப்புடன் திரையிட்டு நடந்தேறியது. அவர்களும் அவரவர் வகுப்புகளை அலங்கரிப்பதில் மும்முரமாக இருந்தனர். இடையில் வரும் சில ஒற்றர்களை எங்களது கண்காணிப்புக்குழுவினர் எச்சரித்து உள்ளேவிடாமல் திருப்பி அனுப்பிவைத்தனர்.

பிற்பகலின் முதல்மணியில் தேர்வுக்குழுவினர் எங்களது வகுப்பை மதிப்பீடு செய்ய வந்தார்கள். இந்தக்குழு அவரவர் வகுப்பாசிரியரைத்தவிர மற்ற 5 நபர்களால் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு வகுப்பையும் பார்வையிட்டு ம்திப்பெண்கள் வழங்கவேண்டும். இவ்வாறாக 10 குழுக்கள் பார்வையிட்டு மதிப்பிட்டு பள்ளித்தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பிறகு தலைமை ஆசிரியரும், சிறப்பு விருந்தினரும் பார்வையாளருமான மாவட்ட ஆட்சித்தலைவரும் ஒவ்வொரு வகுப்பாக பார்வையிட்டனர்.

எங்கள் வகுப்பு முதல் தளத்தில் முதல் வகுப்பாக இருந்தது. எனவே மாணவிகள் சீருடையில் கீழ்த்தளத்திலிருந்து வரிசையாக நின்று வரவேற்பளித்தனர். சாரணியர் முறைப்படி அவருக்கு சல்யூட் அடித்து எங்கள் லீடர் வகுப்பிற்குள் அவர்களை வரவேற்றாள். நறுமணப்புகை, மங்கல இசை, விளக்கொளி என்று எங்கள் வகுப்பே எங்களுக்கு அன்று புதுமையாகக் காட்சி அளித்தது. தலைமை ஆசிரியர் எங்களது அலங்காரங்களை மிகவும் வியந்து பாராட்டினார். ஒவ்வொன்றாக தொட்டுப்பார்த்து ரசித்தார். நிஜப்பூக்களை பிளாஸ்டிக் பூக்களா என்றும், பிளாஸ்டிக் புற்களைப்பார்த்து "இந்தப்புற்களையெல்லாம் எங்கே பறித்து வந்தீர்கள்?" என்றும் கேட்டு எங்களை பரவசப்படுத்தினார். மாவட்ட ஆட்சியாளர் ஒரு 'மாதிரி நகரம்' உருவாக்கியதையும், கொடுக்கப்பட்ட குறுகிய நேரத்தில் இத்தனைச் சிறப்பாக செய்த எங்களது குழு ஒற்றுமையையும் பாராட்டிவிட்டு அடுத்த வகுப்பிற்குச் சென்றார்கள்.

எங்கள் வகுப்பிற்கு என்ன மதிப்பெண் வழங்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வேளை வராததாலும், எங்களது தனி நபர்த் திறமையை வெளிப்படுத்தும் போட்டிக்கு செல்லவேண்டியிருந்ததாலும் நாங்கள் வகுப்பறையை பூட்டி விட்டு மைதானத்திற்குச் சென்றோம்.
ஜீடி மாலை நடக்கவிருக்கும் பரதநாட்டிய வரவேற்பின் ஒத்திகைக்குக்கிளம்பினாள். புனிதா ஓட்டப்பந்தயந்திற்கும், ஷீலா கயிறுதாண்டுதலில் கலந்துகொண்டாள். நான் ஓவியப்போட்டிக்கும், திருக்குறள் போட்டிக்கும் பெயர்க்கொடுத்திருந்தேன். மாலை அரேபிக்&வெஸ்ட்டர்ன் டேன்ஸிலும் கலந்திருந்தேன். இவ்வாறாக நாங்கள் தனித்தனியாக கலைந்தாலும் மீண்டும் மாலை 6 மணிக்கு ஆடிட்டோரியத்தில் ஒன்று கூடினோம். தனிநபர் போட்டி முடிவுகள் போட்டி முடிந்தவுடனேயே அறிவிக்கப்பட்டு பரிசுக்குரியவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. எனவே தனிநபர் போட்டியில் யார் யார் பரிசு பெற்றவர்கள் என்பது நாங்கள் சந்தித்துக்கொண்ட போதே தெரிந்துவிட்டது. எங்களுக்கோ அனைத்து வகுப்புகளுக்குமான போட்டியின் வின்னர் யார் என்பதை அறிந்துக்கொள்ளும் ஆவலே மேலிட்டது. கலைநிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக முடிந்தபின் பரிசு அறிவிப்பு.

எங்களது பி.இ.டி ஆசிரியை தனது வெண்கலக்(பித்தளை?) குரலில் முடிவை அறிவித்தார். "தி ·ப்ர்ஸ்ட் ப்ரைஸ் ஆ·ப் குரூப் யுனிட்டி கோஸ் டூ.... எங்களுக்கு திக், திக்.... "தி ·ப்ர்ஸ்ட் ப்ரைஸ் ஆ·ப் குரூப் யுனிட்டி கோஸ் டூ.... சிக்ஸ்த் ஸ்டேன்டர்ட் ஏ செக்ஷன்.. சிஸ்டர் திரேசா ப்ளீஸ் கம்" என்று எங்களது வகுப்பாசிரியை அழைத்த போது ஆரவாரமும், கைத்தட்டலுமாய் சந்தோசத்தில் குதித்தோம். பள்ளி முழுவதும் கரகோஷம் ததும்ப மாவட்ட ஆட்சியாளரிடமிருந்து 'மெமோரல் ஸ்டேண்ட்' -ஐ எங்கள் வகுப்பாசிரியை வாங்கிய தருணம் அற்புதமானது. மைக்கிலேயே அவர் "தேங்க்யூ மை டியர் ஸ்டூடன்ஸ்" என்று சொல்லிவிட்டு பரிசைத் தலைமை ஆசிரியரிடம் அளித்தார். நான் பள்ளியை விட்டு வரும்வரை அந்த மெமோரியல் ஸ்டேண்ட் தலைமை ஆசிரியரின் அலுவலகத்தை அலங்கரித்தது.

விழா முடிந்ததும் எங்கள் ஆசிரியை பிறகு மேடையிலிருந்து இறங்கி வந்து எங்களிடம் அளவளாவினார். மற்ற ஆசிரியைகளும் எங்கள் வகுப்பிற்கே முதல் மதிப்பெண் அளித்திருந்ததாகவும், அனைவரின் ஏக மன பாராட்டினை வழங்கித்தந்தமை தனக்கு மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறினார். நாங்கள் ரஜினிக்கு எங்களது பாராட்டினைக் கைகுலுக்கித் தெரிவித்துக்கொண்டோம். ஏனைனில் கண்ணாடி விளக்குகள், ஜரிகை அலங்காரப்பொருட்கள், வண்ண மீன்கள்.... என்று பல விலையுயர்ந்த பொருட்களைத் தனது ஸ்டோரிலிருந்து ரிஸ்க் எடுத்து கொண்டுவந்தவளாயிற்றே! அவளோ எங்களிடம் "நீங்கள் தானடி காரணம். இந்தப்பொருட்களெல்லாம் எங்கள் கடையில் சும்மா இருந்த போது இல்லாத அழகு... இங்கே நீங்கள் வரிசையாக அடுக்கி பொருத்தமாக அலங்கரித்தபோது தானே வந்தது" என்றாள்.

அன்றைய 'குழந்தைகள் தினம்' எங்கள் ஒவ்வொருவர் வாழ்நாளிலும் மீண்டும் வர இயலாத பாலக தினம்.