Wednesday, March 30, 2005

இது நம் புராதன வீடு!

ஒழுகும் கூரைகளை
சரி செய்வோம்
அழுகும் பிள்ளைகளை
சிரிக்கச் செய்வோம்

தொங்கும் ஒட்டடைகளை
துவட்டி எடுப்போம்
எங்கும் சுத்தமாய்
இருக்கச் செய்வோம்

கோப்புகளை எல்லாம்
தூசு தட்டுவோம்
கலைந்த புத்தகங்களை
அடுக்கி வைப்போம்

கிழிந்த திரைச்சீலைகளை
நீக்கி விடுவோம்
கறை படிந்த தரையை
துடைத்து எறிவோம்

விரிசல் சுவர்களை
இணைத்து வைப்போம்
பழுதை எல்லாம்
புதிது செய்வோம்

இது நாம் புதுப்பித்த வீடு!

நினைவுப் பரிசுகளை
நிமிர்த்தி வைப்போம்
புகைப் படங்களை
மாட்டி வைப்போம்

பூக்களை ஆங்காங்கே
செருகி வைப்போம்
நறுமணம் எங்கும்
பரவச் செய்வோம்

பழையன யாவையும்
பாது காப்போம்
புதியன வற்றிற்கு
அங்கீகாரம் அளிப்போம்

இது தோட்டம் சூழ்ந்த வீடு!

தோட்டமும் இணைந்தது
நம் வீடு!
அனுதின மலர்கள்
தனியே!
சுவை தரும் கனிகள்
தனியே!
மருத்துவ மூலிகைகள்
தனியே!
பருவ காலப் பயிர்கள்
தனியே!
ஒவ்வொன்றும் ஒரு வகை!
அத்தனையும் தரும் உவகை!

இது நம் எழில் வீடு!

மலர்ச் செடிகளை
வாசலில் வைப்போம்

மாவிலைத் தோரணங்கள்
கட்டி வைப்போம்

மரங்கள் அரணாய்
வலுச் சேர்க்கும்

கருவேலமும் வேலியாய்
துணை நிற்கும்

எதுவும் இங்கே
வீண் இல்லை!

இது மைதானம் தாங்கிய வீடு!

இது குழந்தைகளும்
விளையாடும் வீடு!
தெரு நாய்களை
உள்ளே அனுமதியோம்
வாசல்களை பலமாய்
பூட்டி வைப்போம்
ஆபாசச் சுவரொட்டிகளை
கிழித்தெறிவோம்
யாவரிடத்தும் நாகரிகமாய்
நடந்து கொள்வோம்
இது நம் பண்பாடு
பறைச் சாற்றும் வீடு!

இது நம் ஜன நாயக வீடு!

ஆலோசனைகள்
ஆயிரம் அங்கீகரிப்போம்
தீர்வு ஒன்றாய்
தீர்மானிப்போம்

புதுமைகள் பலவாய்
புரிந்திடுவோம்
செம்மையாய்
செழுமை சேர்த்திடுவோம்

குறைகள் கேட்டு
நிவர்த்தி செய்வோம்
நிறைகள் கண்டு
பயன் பெறுவோம்

இது நம் ராஜ்ய வீடு!

ஒரே தலைவனின் கீழ்
ஒற்றுமையாய் வாழும்
இது நம் ராஜ்ய வீடு!

No comments: