Sunday, March 27, 2005

நிமிர்ந்து பறந்திடு!

ஆணிவேர்கள் நாங்கள் என்றே
கொடிமரமே நீ
நிமிர்ந்து நின்றிடு!

உழைப்பால் நாங்கள்
கயிறுகள் தருவோம்
உயரத்தில் நீ நிமிர்ந்து நின்றிடு!

கக்கும் தீக் காவிக்கு
காவு ஆனாலும்

வெள்ளம் எங்களுக்கு
வெள்ளை அடித்தாலும்

பிச்சை அளிக்கும் மழை
பச்சை தந்தாலும்

எங்கள் நெஞ்சுறுதி
ஏந்தி நீ
நிமிர்ந்து நின்றிடு!

ஏ!
அசோக சக்கரமே,
உன் காலுக்கு
வலியெடுத்தால்
எங்கள்
கண் மணி
பொருத்திடுவோம்!

வேலை தேடும்
எங்கள்
இளைஞர்களின்
முயற்சியைப் போல்
நீ
ஓயாது சுழன்றிடு!

வாழ்க்கை முழுதும்
எங்களின் தேடல் போல
ஓயாது சுழன்றிடு!

எங்கள் சுதந்திரத்தின் உடையே!
வல்லரசு ஆவோம்
என்ற நம்பிக்கை
இசையை
காற்றுக்குச் சொல்லி
ஆனந்தமாய் பறந்திடு!

No comments: