Wednesday, April 04, 2007

எளிய முறையில் ஜாவா - பகுதி 4

ஜாவா ஆணைத்தொடர் அமைப்பு

சென்ற பகுதியில் ஜாவாவின் மொழி கட்டமைப்பினைப்பற்றியும், கீ வோர்ட் (பதிக்கப்பட்ட வார்த்தைகள்) பற்றியும் பார்த்தோம். இப்பகுதியில் சாதாரண ஒரு ஆணைத்தொடர் (program) அமைப்பினை எடுத்துக்காட்டோடு எப்படி இயக்குவது என்று பார்ப்போம்.

< > என்ற அடைப்புக்குறிக்குள் (angle bracket) கொடுக்கப்பட்டவை பயனாளர் தேர்வு செய்யும் பெயர்கள் (user variables) ஆகும்.


class
{
:
;
;
public static void main(String args[])
{


System.out.println(" ");
}
}
--------------------------

(எடுத்துக்காட்டு)

class sample()
{
public static void main(String args[])
{

System.out.println("You are welcome to java programming");
}
}

----------------
இயக்க:
கமன்ட் ப்ராம்ப்டில் (start -> run -> type cmd or command -> enter)
c:\javac sample.java
c:\java sample
கிடைக்கும் பதில்:
output:-
You are welcome to java programming
(javac sample.java என்பது கம்ப்பைலருக்கு தரப்படும் கோப்பின் பெயராகும்.
java sample என்பது இன்டர்ப்ரட்டருக்கு தரப்படும் க்ளாசின் பெயராகும்)


பின்குறிப்பு:-
ஜாவாவை இயக்க

1. ஜாவா விர்ச்சுவல் மெசின் நிறுவப்பட்டிருக்கவேண்டும் (மேலும் விவரத்திற்கு சென்ற பகுதியைக்காண்க)

2. ஜாவா இயங்கு பாதையும் நிறுவப்பட்டிருக்கவேண்டும்.

விண்டோஸ் இயங்கு தளத்தில் இருப்பவர்கள்
my computer -> properties -> environmental variables -> java home -> jdk\bin
-ல் ஜாவா இயங்கு பாதையை நிறுவி விட்டால் எந்த டிரைவிலிருந்தும் உங்களது தரவினை இயக்க முடியும்.

Thursday, March 08, 2007

எளிய முறையில் ஜாவா - பகுதி 3







மொழி கட்டமைப்பு:-






Black = SOA

Cyan = Component

Brown = OOPS

Yellow = Structured

Green = Procedural

Orange = Monolithic Concept

Blue = Assembly Language

Pink = Machine Language

சென்ற பகுதிகளில் ஜாவாவின் சிறப்புகளைப்பற்றிப்படித்தோம். இந்த பகுதியில் மொழியின் கட்டமைப்பைப்பற்றிக்காண்போம். மேலே உள்ள படம் புரோகிராமிங் லாங்க்வேஜின் கட்டமைப்பை எடுத்துரைக்கிறது.

இ-பிஸினஸ் (எலெக்ட்ரானிக் வணிகம்) -காக வடிவமைக்கப்பட்டது தான் ஜாவா. வணிக இணையத்தை உருவாக்குவதற்காக “சிம்பிள் ஆப்ஜெக்ட் ஆக்ஸஸ்” கட்டமைவை ஜாவாவில் எழுதமுடியும். “காம்போனன்ட்” கட்டமைவு என்பது அதற்குள் இருக்கும் சப்-ஆர்க்கிடெக்சர் கும். ஆப்ஜெக்ட் ஓரியண்டட் அமைவு காம்போனண்ட் தயாரிக்க உதவுகிறது. இது போல் ஒவ்வொரு லேயராக பிரிக்க பிரிக்க உட்பொருள் (core) கிடைக்கும்.

தெளிவாக விளக்கவேண்டுமாயின், எடுத்துக்காட்டிற்கு ஒரு வீட்டைக்கட்டவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். வீடு என்பது பல அறைகள் (லேயர்) கொண்டது. அறைகள் கதவு, ஜன்னல், சுவர், கூரை என்ற காம்போனன்ட்களால் ஆனது. சுவரை உருவாக்க செங்கல், சிமெண்ட், காங்கிரீட், பெயிண்ட் முதலானவை தேவை(ஆப்ஜெக்ட்). இவற்றை சரியான விகிதத்தில் கலப்பது எப்படி? அடுத்தடுத்து எந்தெந்த பொருள்களை எவ்விதத்தில் அடுக்கி உருவாக்கவேண்டும் என்பதற்கான வரைமுறையே புரோசிஜீரல், ஸ்ட்ரக்சர் லேயர் ஆகும்.

மோனோலித்திக், அசெம்ப்ளி, மெசின் கோட் என்பது அதனினும் உள்ளார்ந்த மொழி மாற்றங்கள் மட்டுமே!

அதாவது ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசிய மொழி இருக்கும். அதேபோல வட்டார மொழி இருக்கும். அதற்குள் பேச்சு வழக்கு என்ற ஒன்றும் உண்டு. இவற்றுக்கும்மேலாக எளிதான பாஷை செய்கை! இதுபோல மோனோலித்திக் ஒரு குறிப்பிட்ட இன்டர்ப்ரெட்டர் (interpreter - என்பது பயனாளர் மொழியை கணினி மொழியாக மாற்ற உதவும் மொழிமாற்றி) மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய பாஷை. அசெம்ப்ளி யை புரோசசர்கள் (processor) புரிந்துக்கொள்ளும். மெசின் கோட் என்பது 0 அல்லது 1ல் எழுதப்பட்ட மொழியாகும்.

கம்யூட்டரால் பிட்களை(0,1) மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும். மிகப்பெரிய கோடிங்கை அவ்வாறு எழுதுவது மிகவும் கடினம். எனவே, பயனாளர்களால் எளிதாக கையாளக்கூடிய வகையில் மொழி அமைவது இன்றியமையாதது. ஒவ்வொரு லேயரும் அதனினும் மேம்படுத்தப்பட்ட ஒரு கட்டமைவை உருவாக்க உதவியிருக்கிறது என்பது உள்ளார்ந்த உண்மை. (இந்தியா இப்படி இருக்கிறதா?)


சரி.. கட்டமைவினைப்பார்த்தாயிற்று. அத்தகைய மொழி மாற்றத்தை ஜாவாவில் செய்வது யார்?


ஜாவா டெவலப்மண்ட் கிட்:-

javac - ஜாவா கம்ப்பைலர் ஜாவா புரோகிராமை பைட் கோடாக மாற்றும்.

java - ஜாவா இன்டர்பெரட்டர் பைட் கோடை எந்திரமொழியாக மாற்றும்.

Javap -ஜாவா டிஸ்அசெம்ப்ளர் பைட் கோடை புரோகிராம் விளக்கியாக மாற்றும்.

Javah - ஹெட் •பைல்ஸ் புரொடியூசர்

Javadoc - ஜாவா டாக்குமெண்ட்டேசன் ஹெச்டிஎம்எல் -ஆக மாற்ற

Jdb -ஜாவா டீபக்கர் பிழைகளைக்கண்டறிய

appletviewer - ஜாவா அப்லெட் வீவர் அப்லெட் -ஐக் காணஉதவுகின்றன.


ஜாவா லைப்ரரி பைல்ஸ்:-


ஜாவா கீவோர்ட்ஸ்:-




Wednesday, January 31, 2007

எளிய முறையில் ஜாவா - பகுதி 1 & 2

எளிய முறையில் ஜாவா - பகுதி1
ஜாவாவின் வரலாறு:-

1995ம் ஆண்டில் பிறந்த ஜாவாவின் கதை மிக சுவாரசியமானது.
பேட் ரிக் நாக்ட்டன், ஜேம்ஸ் கோஸ்லிங் என்னும் சன் மைக்ரோ சிஸ்டத்தின் இரு பொறியியலார்களும் பயனாளர்களுக்காக மேசை கணினிக்கான மொழியை வடிவமைத்துக்கொண்டிருந்தார்கள். அத்தகைய மொழி தொலைக்காட்சி செயலாக்கி (டிவி ரிமோட்டிலும்) யில் பயன்படுத்தவல்லதாக இருக்கும்படி அமைக்கவேண்டியிருந்ததால், சிறிய நினைவகத்தையும், மின்சாரத்தேக்கத்தையும் கருத்தில் கொள்ளவேண்டியிருந்தது. அதே சமயத்தில் வெவ்வேறு உற்பத்தியாளருடைய பொருட்களுக்கும் அது வளைந்துகொடுக்கக்கூடியதாக இருக்கவேண்டியாதாகவும் இருந்தது. அந்த புரோஜெக்ட்டுக்கு அவர்கள் 'க்ரீன்' (பச்சை) என்று பெயரிட்டிருந்தார்கள்.

நடுநிலையான, எந்த வகையான சிபியூ விற்கும் ஏற்புடைய, குறைந்த நினைவகத்தை ஆக்ரமிக்கும் இந்த புரோஜெக்ட் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்தது. கோஸ்லிங் அதற்கு 'ஓக்' என்றே பெயரிட்டார். ஆனால் ஏற்கனவே அந்தப்பெயரில் வேறொரு மொழி இருந்ததால் பின்னாளில் காப்புரிமையைக்கருத்தில் கொண்டு 'ஜாவா' என்று மாற்ற வேண்டியதாயிற்று.


1992 ம் வெளியிடப்பட்ட 'பச்சை' '*7' என்றும் அழைக்கப்பட்டது. தொடர்பற்ற கட்டுப்படுத்தியாக (ரிமோட் கண்ட்ரோல்) இது சிறப்பாக செயல்பட்டது. இதனை கேபிள் டிவி பாக்ஸ் லும் ரிமோட் சாதனத்திலும் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்துக்காட்டினார்கள். இருப்பினும் இதனை வாங்கிக்கொள்ளவோ, விளம்பரப்படுத்தவோ எந்த நிறுவனமும் முன்வரவில்லை. எனவே பேட் ரிக் நாக்ட்டன் தாமே முயன்று கிட்டத்தட்ட 300,000 மைல்களுக்குச் சென்று மக்களிடம் இதன் சிறப்பைப்பற்றி எடுத்துரைத்தார். 1993 ல் மீண்டும் "·ப்ர்ஸ்ட் பர்சன்"என்ற பெயர் மாற்றத்தோடு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

1994ல் நெட்ஸ்கேப் -ன் அறிமுகத்திற்குப்பிறகு "ப்ர்ஸ்ட் பர்சன்" முடிவுக்கு வந்தது. ஏனெனில் அந்த சமயத்தில் தான் இணையதளம் மக்களிடையே நன்கு புழங்கலாயிற்று. எனவே கிளையன்ட்-சர்வர் ஆர்க்கிடெக்சருக்கேற்ற சிறந்த பிரவுசரையும் அதற்குரிய துணைக்கருவிகளையும் சார்ந்த ஒரு மென்பொருள் தேவை என்பதை பேட் ரிக் நாக்ட்டன் -ம், ஜானாதன் பேனே -ம் உணர்ந்தார்கள். அதன்படி 1995 ல் 'ஹாட் ஜாவா' பிரவுசரையும் அறிமுகப்படுத்தினார்கள். இது ஜாவா மொழியிலே எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாவாவின் சக்தி இணையத்தைத்துவக்கி, இணையத்தில் ஊடுறுவி, இணையத்தை நிர்வகித்து, இணையத்தைக் கட்டுப்படுத்துவது என்று எல்லாவிதத்திலும் இன்று வரை ஒரு ஆளுமையான மொழியாகவே திகழ்கிறது.


இப்படிப்பட்ட மொழியின் தொழிட்நுட்ப சிறப்புக்கள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? அவை அடுத்த பகுதியில் ...

(ஆர்வலர்கள் ஜாவா டெவலப்பர் கிட் டை www.java.sun.com ல் இலவசமாக பதிவிறக்கிக்கொள்ளலாம்)

எளிய முறையில் ஜாவா - பகுதி 2
ஜாவாவின் சிறப்புகள்:-


1. ஆப்ஜக்ட் ஓரியண்டட் புரோகிராம் (பொருள் சார்ந்த வரைமுறை)
2. இன்ஹெரிட்டன்ஸ் (பரம்பரை குணாதிசயம்)
3. பாலிமார்ப்பிசம் (பன்முக அமைவு)
4. டைனமிக் பைண்டிங் (நேரடி இணைவு)
5. மெசேஜ் கம்யூனிக்கேசன் (செய்தித்தொடர்பு)


1. பொருள் சார்ந்த வரைமுறை:-

ஜாவாவில் ஒவ்வொரு பகுதி/வகுப்பு(க்ளாஸ்) ல் உள்ள ஒவ்வொன்றும் ஒரு பொருளாகக்(ஆப்ஜெக்ட்) கையாளப்படுகிறது. அதாவது நாம் தினசரி வாழ்க்கையில் கையாளும் பொருள்களைப்போல..

எ.டு
உலகம் என்பது வகுப்பானால் அதில் உள்ள அனைத்தும் ஒவ்வொரு பொருளாகும். அவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் செய்கைகள் ஆகும்.

எனவே கையாளப்படும் ஒவ்வொன்றும் ஒரு பொருளாகவும்(ஆப்ஜெக்ட்), செய்யப்படும் செயல் செய்கை(மெத்தட்)யாகவும் கையாளப்படுகிறது. எனவே பொருளினையும், செயலினையும் தனித்தனியாக வரையறுக்கவும் வேண்டிய போது வேண்டிய பொருளினை வேண்டிய செயல்களுக்காக பயன்படுத்தவும் முடிகிறது. சரி... இதனால் என்ன லாபம்? இருக்கிறது. ஜாவா ஒரு கட்டுப்பாடுள்ள கம்யூனிசவாதி என்று சொல்லலாம். அதாவது நாம் நமக்குத்தேவையான ஒரு வகுப்பை நிர்ணயிக்கும்போது அதற்கு என்ன பொருள்கள் வேண்டும், அதில் என்னென்ன செயல்கள் செய்யப்படவேண்டும் என்பதை நாமே நிர்ணயிக்கலாம். அதே போல் அதே வகுப்பையும், பொருள்களையும், செயல்களையும் தேவைப்படின் வேறு ஒருவரும் கையாள முடியும். இதனால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒரு அமைப்பு மீண்டும் மீண்டும் பயன்படுத்த ஏதுவாகிறது. இதைத்தான் 'ரீ யூசபிலிட்டி' என்கிறார்கள்.

2. பரம்பரை குணாதிசயம்

அது என்ன பரம்பரை குணாதிசயம்?
என்ன தான் ஜாவா புதுமைவாதியாக இருந்தாலும் பண்பில் பழமைவாதி தாங்க..
எப்படினு கேட்கிறீங்களா? ஜாவா - கிட்ட உனக்கு காதல் திருமணம் பிடிக்குமா? பெற்றோர் பார்க்கும் திருமணம் பிடிக்குமா? என்றால் முன்னுரிமை அளிப்பது 2வது வாய்ப்பிற்குத்தாங்க..

இதில் என்ன லாபம்? இருக்கிறதே! நம்மில் பலர் ரிஸ்க் எடுக்கவிரும்பாதவர்கள்; நாமே பெண் பார்த்து, நாமே அவளைப்புரிந்துகொண்டு, அவளை நம்வழிக்குக்கொண்டுவருவது....ச்ச! அட இதெல்லாம் எதுக்குங்க..
அவங்களே பார்த்துவைப்பாங்க...அவ நம்வழியிலே இருந்தால் நம்ம பாரம்பரியம், பழக்கவழக்கமெல்லாம் அவளே அறிந்துவைத்திருப்பாள்; அதனால் நம்மை அவள் எளிமையாகப்புரிந்துக்கொண்டு இணக்கமாக இருப்பாள்; நம் பெற்றோர்களே பார்ப்பதால் அவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளும் வருவது குறைவு என்பது நமது புத்திசாலி வாழைப்பழ சோம்பேறிகளின் எண்ணம். நம் ஜாவாவும் அந்த ரகம் தாங்க. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட இருவேறு பொருள்களை ஒரு அமைப்பில் இணைத்து வைத்து அதன் குணங்களை எளிமையாக எடுத்துக்கொள்வதும், தேவைப்படின் அதில் புதுமையைச்சேர்ப்பதும் ஜாவாவில் செய்யக்கூடிய பரம்பரை குணாதிசயம் ஆகும்.

சிங்கிள் இன்ஹெரிட்டன்ஸ்:-
அப்பா/அம்மாவின் முகச்சாயல் பிள்ளைக்கு வருவது
மல்டி லெவல் இன்ஹெரிட்டன்ஸ்:-
அதாவது தாத்தாவின் மூக்கும், பாட்டியின் நிறமும், அப்பாவின் சாயலும் பேரனுக்கு இருப்பதோடு அவனது சொந்த குணங்களும் வெளிப்படுவது.

3. பன்முக அமைவு:-

இது இன்னும் சுவாரசியமானது.
அதாவது நம்ம 'ஜீன்ஸ்' பிரசாந்த்-ஐஸ்வர்யாராய், 'வரலாறு' அஜீத், 'பார்த்திபன் கனவு' சினேகா மாதிரிங்க.. ஒரே ஆள் பல கெட்டப் ல வர்றதுக்கு பேரு பன்முக அமைவு.. இதனால் என்ன லாபம்?
ரொம்ப ஈஸி, கெட்டப் மட்டும் மாத்தினால் போதும். கால்ஷீட்/சம்பளம் ஒன்று தான்.(பயன்பாட்டில் ஒருமுறை வரையறுத்தால் போதும்). இங்கே செய்கைகளும் (மெத்தட்) அப்படித்தான், கெட்டப் மாதிரி தகவல்கள்கள்(இன்·பர்மேஷன்) மட்டும்
மாறும். இதனால் பன்முகபயனும், மீள்பயனும் (ரீயூசபிலிட்டி) கிடைக்கிறது.
மீள்பயன் நேரத்தையும், கணினி நினைவகத்தையும் சேமிக்கிறது.

4. நேரடி இணைவு (டைனமிக் பைண்டிங்):-

பொதுவாக ஸ்டேட்டிக் பைண்டிங் தான் நடைமுறையில் உள்ளது.
பைண்டிங் என்பது நாம் எழுதும் வரைமுறையையும், கணினியில் உள்ள கோப்புக்களையும் இணைப்பதாகும். இதற்காக லிங்க்கர்(linker) என்ற புரோகிராமை எழுதிவைத்திருக்கிறார்கள். இந்த லிங்க்கர் தான் நமது எழுத்தாணையையும் கணினியின் செயல்பாட்டையும் இணைக்கிறது. வெவ்வேறு வகுப்பிலுள்ள வெவ்வேறு செய்கையை இயக்க 'நிலையானப்பிணைவு'(ஸ்டேட்டிக் பைண்டிங்) ஏற்றது. ஏனெனில் ஒருமுறை நினைவகத்தில் ஏற்றப்பட்டவுடன் அது அந்த பயன்பாடு முடியும்வரை நிலையாக இருக்கும். ஆனால் 'வெவ்வேறு வகுப்பிலுள்ள ஒரே செய்கையை' இதனால் ஒரே சமயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் முதலில் ஏற்றுக்கொள்ளும் செய்கையை மட்டுமே நினைவில் வைத்திருக்கும்.

எ.டு.
நீங்கள் ரயில்நிலையத்தில் முன்பதிவு செய்யப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 30ம் தேதிக்கு மதுரை பாண்டியன் எக்ஸ்பிரசுக்கும், 7ம் தேதி கல்கத்தா ஹவுரா எக்ஸ்பிரசுக்கும் பதிவு செய்யவேண்டும் என்றால்,
உங்களது செய்கை(மெத்தட்) பதிவு செய்வது(ஒரே செய்கை); ஆனால் வகுப்புகள்(க்ளாஸ்) வெவ்வேறு (மதுரை, கல்கத்தா). ஸ்டேட்டிக் பைண்டிங் -ல் ஒரே சமயத்தில் இருவேறு வகுப்புகளுக்கு ஒரே செய்கையைக்கையாள முடியாது.

ஆனால் டைனமிக் பைண்டிங் -ல் இது சாத்தியம். ஏனெனில் 'நேரடி இணைவு' நேரடியாக நினைவகத்தைச் சுட்டுவதோடு(பாயிண்டிங்), பயன்பாட்டின் இயக்க
நேரத்தில்(ரன் டைம்) மட்டுமே செயல்படுகிறது. இதனால் செயல் முடிந்தவுடன் அதன் இயக்கம் துண்டிக்கப்பட்டு அதே பெயரிலுள்ள அடுத்த செய்கைக்கு வழிவிடுகிறது.

5. செய்தித்தொடர்பு:-

இதுவரை வகுப்பு(க்ளாஸ்), பொருள்(ஆப்ஜெக்ட்), செய்கை(மெத்தட்) உங்களுக்குப்புரிந்திருக்கும். வகுப்பின் அங்கம்தான் பொருளும், செய்கையும். அவற்றுள் அடங்குவது செய்தியும், தகவலும். செய்தியையும்(மெசேஜ்), தகவலையும்(டேட்டா) இணைப்பது செய்தித்தொடர்பு(கம்யூனிக்கேஷன்) ஆகும்.

'சிறார்கள் கொல்லப்பட்டார்கள்' என்பது செய்தி.
'நொய்டா', '70' என்பது தகவல்.

"நொய்டாவில் 70 சிறார்கள் கொல்லப்பட்டார்கள்" என்று இரண்டையும் இணைப்பது செய்தித்தொடர்பு.

வெறும் செய்தியோ, வெறும் தகவலோ முழுமையான பொருளைத்தராது. செய்தித்தொடர்பு அதை நிறைவுச்செய்கிறது.

Monday, April 10, 2006

குழந்தைகள் தினம்...

குழந்தைகள் தினம்...

நேருஜி பிறந்த நவம்பர் 14 - குழந்தைகள் தினம்...

காலையில் பள்ளி எப்போதைய நாளை விடவும் களை கட்டியது.

வகுப்பறையில் அலமாரி முழுவதும் பொம்மைகளாக நிறைந்திருந்தன. ரெட், புளூ, பிங்க், கிரீன், யெள்ளோ ஹவுஸ் குழுக்களின் அடிப்படையில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வேலையாக பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலில் வகுப்பறையிலுள்ள டெஸ்க், பெஞ்ச் அனைத்தும் ஒரு குழு அப்புறப்படுத்தியது. இன்னொரு குழு நீரூற்றி வகுப்பறையை சுத்தம் செய்தது.

அலங்கரிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. கொண்டுவந்த பொம்மைகள், வகுப்பறை ஆவணங்கள், கோப்புகளை பாதுகாக்கவும், வேறு வகுப்புப் பிள்ளைகள் எங்கள் வகுப்பில் நடப்பதை அறியாவண்ணம் பாதுகாக்கவும் இன்னொரு குழு நியமிக்கப்பட்டது.

கரும்பலகையில் கலைமகளின் ஓவியத்தை ஒருத்தி வரைய, ரோஜா இதழ்களால் வாசலில் நேருவின் உருவப்படத்தை இன்னொருவர் வரைய பெஞ்ச் மீது பெஞ்ச் போட்டு சாட், கலர் பேப்பர் ஒட்ட என்று ஆளுக்கொருவராக வேலைகளை எங்கள் குழுவில் ஆரம்பித்தோம்.
வகுப்பிலுள்ள அனைவரது பொம்மைகளுமாக சேர்ந்து ஒரு சிறிய குன்று போல பொம்மைகள் இருந்தன. யாருடைய பொம்மைகள் யாருடையவை என்பதைக் கண்காணிப்புக்குழுக்கள் பெயர், எண்ணிக்கையுடன் ஒரு பட்டியல் தயார் செய்து வைத்திருந்தனர். இதனால் எங்களுக்கு அவைகளைப் பிரிப்பதும் மீண்டும் அவர்களுக்கு திருப்பிக்கொடுக்கவும் வசதியாக இருந்தது.

கொண்டுவரப்பட்ட பொம்மைகளில் ஒரே ரகமாக இருந்த பொம்மைகளை எல்லாம் தனித்தனியாக நான் பிரித்தெடுத்தேன். அதாவது, வாகன பொம்மைகளை எல்லாம் தனியாக, கடவுள் உருவ பொம்மைகள் தனியாக, விலங்குகள், செடிகள், மீன்கள் போன்ற பொம்மைகள் தனியாக என்று வகைப்படுத்தினேன். மீதி பொம்மைகள் பெஞ்ச், டெஸ்க்குகளை அடுக்கிவைத்து நவராத்திரி கொழு போல பொம்மைகள் வரிசையாக படிகளில் அடுக்கிவைக்கப்பட்டன.

மஞ்சு, சொன்னபடி களிமண்ணும், பிள்ளையார் பொம்மையும் கொண்டுவந்திருந்தாள்; அதை மலையாக்கி மலையில் பிள்ளையாரை அமர வைத்து படிகள் செய்து அடிவாரத்தில் ஆறு அமைத்து ஆர்க்கிடெக்சர் பொம்மைகளால் அணை செய்து சுற்றிலும் செடிகள் வைத்து நிரப்பினோம். மயில், மான், புறா ஆங்காங்கே நிற்பது போல, பறவைகள் பறப்பது போல அவற்றில் அழகாக பொருத்தி வைத்தோம்.

அணையின் அடியில் தண்ணீர் நிரப்பி களிமண்ணால் கரைகள் கட்டி பல வண்ண பிளாஸ்டிக் மீன்களை அதில் விட்டு கரையில் ஒரு மீனவ பொம்மையைக் கையில் தூண்டிலோடு அமரவைத்தோம். சின்ன சின்ன பூக்களால் ஒட்டவைத்து பச்சைவண்ணத்தாளை மெல்லியதாக நறுக்கி புல்வெளி அமைத்து அவற்றில் நிஜக் கொடிகளைப் படரவிட்டோம்.

அதனருகே வரிசையாக செல்லும் ரயில்பெட்டிகளை அடுக்கி கீ கொடுத்தால் ஓடும் தண்டவாளத்தின் மீது அமைத்து ரயில் நிலையமும், பஸ் பொம்மைகளைக்கொண்டு பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டது. அட்டைப்பெட்டிகளாலும் செங்கற்கல்லாலும் அடுக்கிவைத்து காவல் நிலையத்தின் முன்புறத்தை மட்டும் உருவாக்கி இருந்தோம். சாக்பீஸால் வட்டம் போட்டு அதனுள் விமான பொம்மைகளை நிற்கவைத்து விமான நிலையமும் தயார் ஆனது.

மற்றொரு புறம் ஸ்கூட்டர், கார், லாரி பொம்மைகளை வரிசையாக அடுக்கி ஒரு சிலவற்றை மட்டும் ரோடில் செல்வதுபோல சாக்பீஸால் ஆன ரோட்டில் நிறுத்தினோம். ஆங்காங்கே டிராபிக் சிக்னல் ஸ்டேண்டுகளையும் ஸ்கேலின் உதவியால் நிற்கவிட்டோம்.
மலைப்படிகள் காய்ந்ததும் புனிதா அவளது அகல் விளக்குகளை ஏற்றிவைத்தாள். மற்ற கடவுள் சிலைகளைக்கும் ஆங்காங்கே தெர்மோகோலில் செய்த கோபுரத்தின் வாசலில் கோலங்கள் இட்டாள். ஊதிபத்தியும், மலர் மாலைகளும் கொண்டு ஷீலா அலங்கரித்தாள்.
பெண்கள், குழந்தைகள் போன்ற ஆளுருவ பொம்மைகளையும் கோயில் பிரகாரத்தில் ஆங்காங்கே ஜீடி நிற்க வைத்தாள்.

அலமாரியில் புத்தகங்கள் ஒருபுறம் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டு திடீர் நூலகமாக மாறியது. பிளாஸ்டிக் காய்கறிகள், பழங்களை ஒரு கூடையில் அடுக்கி வைத்து இன்னொருபுறம் 'திடீர் சந்தை' முளைத்தது. சுவரின் ஒருபுறத்தில் தேசியத் தலைவர்கள் படமும், மற்றொரு புறம் பாடநூல், உலக வரைபடங்கள், இன்னொரு புறம் நாங்கள் வரைந்துவந்த படங்களையெல்லாம் வரிசயாக மாட்டினோம். அங்கங்கு தெரிந்த மீதி சுவர் பாகங்களையும் கலர் ஜரிகைத்தாள்களால் அலங்கரித்தோம். வகுப்பின் நடுவில் கண்ணாடிவிளக்கு மாட்டப்பட்டது. நுழைவு வாயில் சுவர்கள் பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாசலிலும் மலர்க்கோலங்கள், கலர்ப்பொடிகளால் ரெங்கோலி போடப்பட்டது.

இந்திய வரைபடத்தை நடுவில் வரைந்து தேசிய ஒற்றுமையைக் குறிக்கும்வண்ணம் ஒவ்வொரு மாநிலத்தின் நடுவிலும் அந்தந்த கலாச்சார முறைப்படி ஆடையணிந்த மாணவிகளை நிற்கவைத்தோம். கொழுப்படியின் அடியில் டேப் ரிக்கார்டர் மங்கல இசைத்தட்டோடு தயாராக வைக்கப்பட்டிருந்தது. இவையனைத்தும் மற்ற வகுப்புகளுக்கு துளியும் சென்று சேராவண்ணம் மிக கவனமான பாதுகாப்புடன் திரையிட்டு நடந்தேறியது. அவர்களும் அவரவர் வகுப்புகளை அலங்கரிப்பதில் மும்முரமாக இருந்தனர். இடையில் வரும் சில ஒற்றர்களை எங்களது கண்காணிப்புக்குழுவினர் எச்சரித்து உள்ளேவிடாமல் திருப்பி அனுப்பிவைத்தனர்.

பிற்பகலின் முதல்மணியில் தேர்வுக்குழுவினர் எங்களது வகுப்பை மதிப்பீடு செய்ய வந்தார்கள். இந்தக்குழு அவரவர் வகுப்பாசிரியரைத்தவிர மற்ற 5 நபர்களால் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு வகுப்பையும் பார்வையிட்டு ம்திப்பெண்கள் வழங்கவேண்டும். இவ்வாறாக 10 குழுக்கள் பார்வையிட்டு மதிப்பிட்டு பள்ளித்தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பிறகு தலைமை ஆசிரியரும், சிறப்பு விருந்தினரும் பார்வையாளருமான மாவட்ட ஆட்சித்தலைவரும் ஒவ்வொரு வகுப்பாக பார்வையிட்டனர்.

எங்கள் வகுப்பு முதல் தளத்தில் முதல் வகுப்பாக இருந்தது. எனவே மாணவிகள் சீருடையில் கீழ்த்தளத்திலிருந்து வரிசையாக நின்று வரவேற்பளித்தனர். சாரணியர் முறைப்படி அவருக்கு சல்யூட் அடித்து எங்கள் லீடர் வகுப்பிற்குள் அவர்களை வரவேற்றாள். நறுமணப்புகை, மங்கல இசை, விளக்கொளி என்று எங்கள் வகுப்பே எங்களுக்கு அன்று புதுமையாகக் காட்சி அளித்தது. தலைமை ஆசிரியர் எங்களது அலங்காரங்களை மிகவும் வியந்து பாராட்டினார். ஒவ்வொன்றாக தொட்டுப்பார்த்து ரசித்தார். நிஜப்பூக்களை பிளாஸ்டிக் பூக்களா என்றும், பிளாஸ்டிக் புற்களைப்பார்த்து "இந்தப்புற்களையெல்லாம் எங்கே பறித்து வந்தீர்கள்?" என்றும் கேட்டு எங்களை பரவசப்படுத்தினார். மாவட்ட ஆட்சியாளர் ஒரு 'மாதிரி நகரம்' உருவாக்கியதையும், கொடுக்கப்பட்ட குறுகிய நேரத்தில் இத்தனைச் சிறப்பாக செய்த எங்களது குழு ஒற்றுமையையும் பாராட்டிவிட்டு அடுத்த வகுப்பிற்குச் சென்றார்கள்.

எங்கள் வகுப்பிற்கு என்ன மதிப்பெண் வழங்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வேளை வராததாலும், எங்களது தனி நபர்த் திறமையை வெளிப்படுத்தும் போட்டிக்கு செல்லவேண்டியிருந்ததாலும் நாங்கள் வகுப்பறையை பூட்டி விட்டு மைதானத்திற்குச் சென்றோம்.
ஜீடி மாலை நடக்கவிருக்கும் பரதநாட்டிய வரவேற்பின் ஒத்திகைக்குக்கிளம்பினாள். புனிதா ஓட்டப்பந்தயந்திற்கும், ஷீலா கயிறுதாண்டுதலில் கலந்துகொண்டாள். நான் ஓவியப்போட்டிக்கும், திருக்குறள் போட்டிக்கும் பெயர்க்கொடுத்திருந்தேன். மாலை அரேபிக்&வெஸ்ட்டர்ன் டேன்ஸிலும் கலந்திருந்தேன். இவ்வாறாக நாங்கள் தனித்தனியாக கலைந்தாலும் மீண்டும் மாலை 6 மணிக்கு ஆடிட்டோரியத்தில் ஒன்று கூடினோம். தனிநபர் போட்டி முடிவுகள் போட்டி முடிந்தவுடனேயே அறிவிக்கப்பட்டு பரிசுக்குரியவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. எனவே தனிநபர் போட்டியில் யார் யார் பரிசு பெற்றவர்கள் என்பது நாங்கள் சந்தித்துக்கொண்ட போதே தெரிந்துவிட்டது. எங்களுக்கோ அனைத்து வகுப்புகளுக்குமான போட்டியின் வின்னர் யார் என்பதை அறிந்துக்கொள்ளும் ஆவலே மேலிட்டது. கலைநிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக முடிந்தபின் பரிசு அறிவிப்பு.

எங்களது பி.இ.டி ஆசிரியை தனது வெண்கலக்(பித்தளை?) குரலில் முடிவை அறிவித்தார். "தி ·ப்ர்ஸ்ட் ப்ரைஸ் ஆ·ப் குரூப் யுனிட்டி கோஸ் டூ.... எங்களுக்கு திக், திக்.... "தி ·ப்ர்ஸ்ட் ப்ரைஸ் ஆ·ப் குரூப் யுனிட்டி கோஸ் டூ.... சிக்ஸ்த் ஸ்டேன்டர்ட் ஏ செக்ஷன்.. சிஸ்டர் திரேசா ப்ளீஸ் கம்" என்று எங்களது வகுப்பாசிரியை அழைத்த போது ஆரவாரமும், கைத்தட்டலுமாய் சந்தோசத்தில் குதித்தோம். பள்ளி முழுவதும் கரகோஷம் ததும்ப மாவட்ட ஆட்சியாளரிடமிருந்து 'மெமோரல் ஸ்டேண்ட்' -ஐ எங்கள் வகுப்பாசிரியை வாங்கிய தருணம் அற்புதமானது. மைக்கிலேயே அவர் "தேங்க்யூ மை டியர் ஸ்டூடன்ஸ்" என்று சொல்லிவிட்டு பரிசைத் தலைமை ஆசிரியரிடம் அளித்தார். நான் பள்ளியை விட்டு வரும்வரை அந்த மெமோரியல் ஸ்டேண்ட் தலைமை ஆசிரியரின் அலுவலகத்தை அலங்கரித்தது.

விழா முடிந்ததும் எங்கள் ஆசிரியை பிறகு மேடையிலிருந்து இறங்கி வந்து எங்களிடம் அளவளாவினார். மற்ற ஆசிரியைகளும் எங்கள் வகுப்பிற்கே முதல் மதிப்பெண் அளித்திருந்ததாகவும், அனைவரின் ஏக மன பாராட்டினை வழங்கித்தந்தமை தனக்கு மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறினார். நாங்கள் ரஜினிக்கு எங்களது பாராட்டினைக் கைகுலுக்கித் தெரிவித்துக்கொண்டோம். ஏனைனில் கண்ணாடி விளக்குகள், ஜரிகை அலங்காரப்பொருட்கள், வண்ண மீன்கள்.... என்று பல விலையுயர்ந்த பொருட்களைத் தனது ஸ்டோரிலிருந்து ரிஸ்க் எடுத்து கொண்டுவந்தவளாயிற்றே! அவளோ எங்களிடம் "நீங்கள் தானடி காரணம். இந்தப்பொருட்களெல்லாம் எங்கள் கடையில் சும்மா இருந்த போது இல்லாத அழகு... இங்கே நீங்கள் வரிசையாக அடுக்கி பொருத்தமாக அலங்கரித்தபோது தானே வந்தது" என்றாள்.

அன்றைய 'குழந்தைகள் தினம்' எங்கள் ஒவ்வொருவர் வாழ்நாளிலும் மீண்டும் வர இயலாத பாலக தினம்.

Wednesday, January 18, 2006

கண்ணாடியல்ல, பனித்துளி

ஒளிவாங்கும் ஓர் ஒளியைக் கண்டேன்
என் உளியதுவோ என்றே
முன் நின்றேன்
பார்த்தால் பார்த்து
சிரித்தால் சிரித்து
அழுதால் அழுதது
ரசக் கண்ணாடி!
முன்னாடி நின்று
பிம்பத்தை உள்வாங்கி
பின்
அனல்மூச்சாய் வெளிவிட்டுத்
தேடினேன்... தேடினேன்
காணவில்லை...
கைத்தளம் பற்றும்முன்னே
கரைந்தது
அது
கண்ணாடியல்ல, பனித்துளி.

Wednesday, December 21, 2005

அண்ணா எப்போது வரும்?

எனக்கு முன் பிறந்தாய்
தமையனாய் பிறந்ததால்
'தலை'பாரம் சுமந்தாய்
சுமைகளோடுச் சேர்த்து
என்னையும் சுமந்தாய்

சின்னவயதில்
தோளில் தூக்கிக்கொண்டு
நீ
தென்னையில் மறைந்த
நிலாவைக்காட்டினாய்

பறித்து வந்த ஈச்சம்பழங்களை
தொன்னையில் வைத்து
ஊட்டினாய்

சேற்றில் பாதம்படும் என்று
முதுகில் சுமந்து
உலா சுற்றினாய்

வைக்கோலைத் திரியாக்கி
மாமர ஊஞ்சல் ஆட்டினாய்

முகத்தைப்பொத்திக்கொண்டு
தேனடை அடித்துத் தந்தாய்

வாய்க்காலில் ஓட்ட
காகித ஓடம்
செய்துத் தந்தாய்

நினைக்க நினைக்க
கற்கண்டாய் இனிக்குது

மருக மருக
மெழுகு போல் உருகுது

ஒற்றைக்கதவுமேல் நின்றுக்கொண்டு
அரை ராட்டினம் சுற்றுவோம்
கொம்போடு அப்பா வந்தால்
தலை தெறிக்க ஓடுவோம்

ஊருக்கு நான் வந்தால்
சின்ன ராணி தான் நான்
நம்வீட்டில்...

யானை அம்பாரியாய் நீ
பல்லாக்காய் நீ
ஊஞ்சலாய் நீ
ஊர்வலமாய் நீ
அந்த இளம்பருவம்
மீண்டும் வருமா அண்ணா?

திரவியம் தேட என்று
நம் ஊர் இளவட்டம் எல்லாம்
இன்று வெவ்வேறு தேசத்தில்

மூத்தவன்
படித்தவன்
நீ ஒருவன் என்று
நம் வீட்டுப்பங்காக
சென்றாய் நீ
10 வருடங்களுக்கு முன்பு

உசிரா நம்ம வளர்த்த பாட்டி
உன் மேல் உயிலெழுதி
உசிர விட்டுச்சு...
நீ வரல...

காதலிச்சதால உனக்குமுன்னே
கல்யாணம் பண்ணிக்கிட்டான் தம்பி
நீ வரல...

மண்ணுக்குள் விதைபோட்டால்
பொன்விளையும் நம் பவள தேசம்
பளிங்கு தேசமாச்சுதுன்னு
விளைச்சலில்லாம வீழ்ந்தார்
நம் அப்பா
நீ வரல...

ஒரு கண்ணாலத்த பண்ணி
கண் குளிர பார்க்க மாட்டேனா?
ஓயாம அழுது ஆத்தா
ஆனாலும்
நீ வரல...

நீ பேசாத வார்த்தைகளையெல்லாம்
கரன்சியில் பேச நினைத்தாய்
சோகத்தையோ கண்ணீரில் நனைத்தாய்

அண்ணனுக்கு எப்போ கல்யாணம்?
ஊரெல்லாம் கேட்குது...
எனக்கும் கூட ஆசை தான்!
நேரிலே உன்னைப்பார்க்க...

ஆனா... நான் எழுதியது
அதுக்கில்ல..
மீதி வரதட்சணைய பொங்கலுக்குள்
கொடுக்கணுமாம்

இல்லாட்டி பொங்கப்பானை
உங்காத்தா வூட்டிலேயே பொங்கிக்கோங்கறார்
உன் கறார் அத்தான்..
பொங்கலுக்குள் வந்துடுமா அண்ணா
உன் அடுத்த மாச சம்பளம்?

Thursday, September 22, 2005

நிழலும் நானும் - ஒரு விளையாட்டு

நான் பிறக்கும்முன்பே
பிறந்துவிட்ட நிழலே...
என் மீது தான்
எத்தனை பிரியம் உனக்கு!
இருக்கும்போதும்
நடக்கும்போதும்
உறங்கும்போதும் கூட
விழிப்புடன்
என்னுடன் நீ....
நீ மட்டும்!
கடுகுக்கும் கடலுக்குமாய்
நமது போட்டி
நான் எழும்முன்பே
நீ நிற்கிறாய்
நான் நிற்கும்போதோ
ஓடுகிறாய்
உன் ஓட்டத்தைப் பிடிக்க
ஓடி ஓடி
நான் களைத்தேன்.
களைத்தபோதும்
உன் நிழலில்
கொஞ்சம் திளைத்தேன்.
ஆனாலும் நீ
அசரும்போது
அசத்திப்பார்ப்பதில்
ஆனந்தம்தான் எனக்கு!
நான் பலமாய் நிற்கையில்
என் காலடியில் நீ!
கர்வம்தான் எனக்கு...
உன்னை ஒரு நாளாவது
என் காலடியில் போட்டு
மிதித்துவிட மாட்டேனா என்று!
நீ
ஓடும் வேகத்தில்
நானும்
அசுரமாய்....
விரைகையில் விரிகிறாய்
விரிகையில் விரைகிறாய்
நீ நினைக்கும்முன்
நான் நிற்க
போட்டி தான் நமக்குள்.
நேற்று நான்.
இன்று நீ.
மாறி மாறி நமக்குள் வெற்றி.
உன்
களைப்பைப்பார்க்கும் வெறி
எனக்குள் எழுந்தபின்
நான் சளைக்கவே இல்லை.
உன் வேகம் கூட
எனக்கு சவால் தான்.
உன் முடக்கம் கூட
எனக்கு வேதனை தான்.
ஏனெனில்
நீ ஓடுவதாலேயே
நானும் ஓடுகிறேன்.
உன்னுடன் ஆடும்
ஆட்டத்தினாலே
எனது வாசலும் நீள்கிறது.

Thursday, September 01, 2005

நல்லதோர் வீணையே!

எந்தன் வீணையே!
வீணாய்ப் போனதேனோ?
நகரும் போதை மாயைக்குள்
உன் தந்திகள் புதைந்துப் போயினவோ?

நீ சுரத்தையின்றி சுருண்டால்
நற்சுரங்கள் அழாதோ?
காய்ச்சலுக்காக மருந்துண்ணலாம்.
மருந்தே உணவானால்...?
அது உன்னை உண்டுவிடாதா?

வாழ்க்கையில் களிப்புகள் இருக்கலாம்.
களிப்பே வாழ்க்கையானால்
எதிர்காலம் என்னாவது? நீ
மிச்சமின்றி துய்த்த எச்சத்தில்
மிஞ்சிக்குப் பூசைகளா?

நாளைய அரை நாள்
இன்றைய ஒரு நாளுக்குச் சமமாம்.
களித்தது போதும்.
இன்றே எழுந்திரு!
உன்னிடமுள்ள சுரமே
சுரத்தை ஓட்டும் மருந்து.

நீ மீட்ட மீட்ட
தூசுகள் தானே ஓடிவிடும்.
உன் சுரம் நான் கேட்கிறேன்.
நல்லதோர் வீணையே!
புழுதியில் கிடக்காதே!

Friday, August 19, 2005

காதலிப்பதாகச் சொல்லாதே!

நீட்டித்திருக்கும் உன் தூக்கத்தில்
வண்ணக்கனவுகள் இல்லை

மீள்பார்வைப் பயணங்களில்
பச்சையங்கள் இல்லை

குவித்த சிந்தனைகளில்
சுடரொளிப் பற்றி எரியவில்லை

விரிந்த விலகல்களில்
வானவில் இல்லை

சந்திப்புகளில்
சர்க்கரை இல்லை

பிரிவுகளில்
சயனைடு இல்லை


நீ
காதலிப்பதாகச் சொல்லாதே!

சம்பளத்தின் மீது
சம்மந்தம் செய்வதல்ல
காதல்.

சக்கை உடலுக்குச்
சாறூற்றுவதல்ல
காதல்.

மற்றதற்கு மாற்று
அல்ல காதல்.

காதல்....
நுண்ணிய ரசனைகள்
நுகரும் ரசவாதம்!

ஒளிக்குள்
ஒளிந்திருக்கும்
வெப்பம்போல்

எனக்குள்
உன்னை

உனக்குள்
என்னை

உருக்கி உருக்கி
ஊற்றி சமன் செய்ய முயலும்
ஓட்டைப்பாத்திரம் காதல்

முதலில் பிடிக்கும்
பிறகு குடிக்கும்
கடைசியில் வெடிக்கும்

தொட்டால் விலகும்
விலகினால் துரத்தும்
மூழ்கினால் மிதக்கச் செய்யும்!
அது தான் ஆழம்.

அதுவரை....

நீ
காதலிப்பதாகச் சொல்லாதே!
யார் சொல்லித் தெரியவேண்டும்?
உன்னை நான்
எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை!

யார் சொல்லித் தெரியவேண்டும்?
நீ இல்லாத வெறுமை
எனக்கு எத்தனைக் கொடுமை என்பதை!

யார் சொல்லித் தெரியவேண்டும்?
எனக்குள் நீ நிறைந்திருப்பதை போல
உனக்குள் நான் எங்கேயோ ஒளிந்திருக்கிறேன் என்பதை!

உன் மனம் உன்னிடம்
பேசுவதே இல்லையா?

உன்னைப்போலவே
உன் மனதிற்கும் பிடித்த மொழி
மௌனம் தானோ!

Friday, August 05, 2005

பத்திரிக்கை

பிஞ்சுகளை வெம்பவிடும்.
மலர்களை மணம் பரப்பும்.
காய்ந்த சருகுகளுக்கு கம்பளம் விரிக்கும்.

மக்களுக்கு முகம்பார்க்கும் கண்ணாடி
மந்திரிகளுக்கு மாயாஜால கண்ணாடி
திரையுலகுக்கு அணியும் தங்கக்கண்ணாடி

உருப்படியான பக்கம் இல்லாமல் கூட இருக்கும்
உருவங்களால் பலானம் இல்லாமல் இருக்காது

நான்கு உண்மைகளில்
நாற்பது பொய்கள்

கூவத்தின் சரக்குகளுக்கு
கூவி கூவி வியாபாரம்

நாடி படிக்க வேண்டியவை
இன்று
நாடிப்பிடிக்கும்படி!

Wednesday, August 03, 2005

குதிரை சவாரி (ஏப்ரல் 27,2005)

அது ஒரு அழகான குதிரை
ஆனால் அங்கும் இங்கும் பார்க்கும்
மிக பலமானது,
மிக வேகமானது,
புத்தி கூர்மையானது,
வேடிக்கை பார்க்காதவரை.
அது சாதாரண மனிதனைவிட புத்திசாலி
எது எல்லையோ
அதை அடையும்வரை
அது வேடிக்கை பார்க்கக்கூடாது
கடிவாளமிட்டேன்
ஏறி அமர்ந்தேன்
லட்சியம் என்பதை கண்ணிலும்
கடிவாளத்தைக் கையிலும் வைத்து
எனது பயணம் லட்சியத்தை நோக்கி
நானும் வேடிக்கை பார்க்கக்கூடாது
குதிரையையும் வேடிக்கை
பார்க்கவிடக்கூடாது
புத்திசாலிக்குதிரையோ
மேயும், நடக்கும்
சண்டித்தனம் செய்யும்
விடாமல் விரட்டவேண்டும்
அது ஓடும்போது
எனது கவனமும் சிதறக்கூடாது
குதிரையின் கண் ஒரு கண்
லட்சியத்தின் கண் மறு கண்
ஓடு ஓடு விரட்டு விரட்டு
------------------------

சதுரங்கம் (மார்ச் 15, 2005)

நீயும் நானும்
ஆடும் சதுரங்கம்
அங்கே
யானைகள் இல்லை
குதிரைகள் இல்லை
சிப்பாய்கள் இல்லை
ராஜாவும் நீ
மந்திரியும் நீ
உனது குறியோ
எதிர் அரசை வீழ்த்துவது!
வீழ்த்தத் துவங்கிவிட்டாய்...
உன் ஒவ்வொரு வார்த்தைகளும்
இங்கே ஆயுதம்
எனது சேனைகள் தோற்றன
மந்திரி வியூகம் மழுங்கிப்போனது
உனக்குத் தடைவைக்கும்
ஒவ்வொரு சிப்பாயும்
கடைசிக்கட்டங்களில்
எதிர் அரசிற்கு
சாதகமாகிப் போகின்றன
தோற்போம் எனத்தெரிந்தும்
தொடுக்கிறேன் போர்
எனது ஆயுதங்கள்
ஒவ்வொன்றாய் கழலப்பெற
நிராயுத பாணியாக நான்
மௌனத்தில்...
உன்னை வீழ்த்துவது
எந்தன் நோக்கமல்ல
ஆகையினால்
சரணடைகிறேன்...
உந்தன் அன்பில் தோற்றுப்போய்...

சுனாமி - டிசம்பர் 2004

உன்னை நிறை குடம்
என்றல்லவா எண்ணியிருந்தோம்
ஏன் தளும்பினாய்?

உன் உப்பைத் தின்றதற்காகவா
எங்கள் கண்களை கரிக்கச்செய்தாய்?

எங்கோ மூட்டிய வெப்பம்
இங்கேயும் தணிய வில்லை
உன் அவசரக்காய்ச்சலுக்கு
எங்கள் தீவு வில்லைகளும்
போத வில்லை

ஆசியா கண்டு நாளானது என்று
ஆசையுடன் வந்தாயோ?
ஆணவம் ஏறிப்போய்
அலைக்கழித்து சென்றாயோ?

சிங்கார சென்னையும்
சிதிலமுற்று..
அழகான அந்தமானும்
அலங்கோலமாய்..

காணச் சகிக்கவில்லை
கூறுகட்டிய மீன்கள் போல்
குவியல் குவியலாய் பிணங்கள்

பெற்றோரை இழந்த
பிஞ்சுக் குழந்தைகள்
குடும்பத்தை இழந்த
தனி மரங்கள்
இனி பெற்றுக்கொள்ளமுடியாத
இளம் பெற்றோர்கள்

குருவிக்கும் காக்கைக்கும்
தினை வீசிய கைகள்
இன்று
ஒரு வேளை சோற்றுக்கே
கையேந்துகிறது..

என்றோ புதைத்த வேதி
இன்று
எங்கள் விதிக்கு
வினையானது

சோகத்தின் சாயங்கள்
கரையோரத்தில்
கறுப்பு வண்ணமாய்.

----------------------------

Sunday, July 24, 2005

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 20

வஞ்சிப்பா

வஞ்சிப்பாவின் இலக்கணம்:-

1. தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி என்று கனிச்சீர் கொண்டு வரும்.
2. இது வஞ்சிப்பாவுக்கே உரிய சீர் ஆதலால் வஞ்சியுரிச்சீர் ஆகும்.
3. இவற்றோடு பிறசீர்களும் விரவி வரும்.
4. இப்பாடலுக்கு உரிய தளை வஞ்சித்தளை. இது இருவகைப்படும்.
அ) ஒன்றிய வஞ்சித்தளை - அதாவது கனிமுன் நிரையசை வருவது.
ஆ) ஒன்றாத வஞ்சித்தளை - அதாவது கனிமுன் நேரசை வருவது.
5. பிற பாடல்களுக்குரிய தளைகளும் பெற்று வரும்.
6. வஞ்சிப்பா தூங்கலோசை பெற்று அமையும்.
7. அடி வரையறை மூன்றடியாகும். இரண்டடியாகவும் வரலாம். இதற்கு மேல் எத்தனை
வேண்டுமானாலும் வரும்.

தூங்கலோசை:-
1. ஏந்திசைத் தூங்கலோசை
2. அகவல் தூங்கலோசை
3. பிரிந்திசைத் தூங்கலோசை

என மூன்று வகைப்படும்.

1. ஏந்திசைத் தூங்கலோசை
ஒன்றிய வஞ்சித்தளைகள் வருவது ஏந்திசைத் தூங்கலோசை ஆகும்.

எ.டு:-

உழவுத்தொழில் நனியாற்றிடும்
கழனித்துறை வளங்கள்பெறக்
கருத்தாய்வயற் களத்தேசெல
வெறுக்காநிதிப் பெருக்காகுமே.

2. அகவல் தூங்கலோசை
இது ஒன்றாத வஞ்சித்தளை வருவது. அதாவது கனிச்சீரையடுத்து நேரசை வரும்.
ஆனால் அனைத்தும் கனிச்சீர்களாகவே இருக்கும்.

எ.டு:-

கூவும்குயில் நன்றாகவும்
தாவும்மரை சார்ந்தோடவும்
மேவும்மயில் மெல்லேவர
யாவுமனை வாழ்வித்ததே.

3. பிரிந்திசைத் தூங்கலோசை
இதில் ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை இவற்றையல்லாது பிற தளைகளும்
வரும்.

எ.டு:-

ஏதமிலா எழிலசைய
மாதுமொரு முறத்தால்தனை
மோதுமொரு வேங்கையினை
மோதித்துரத் தினள் அன்றே.

இது வரை பாக்களைப் பற்றியும் அவற்றின் வகைகளைப் பற்றியும் பார்த்தோம். பாக்களில் தாழிசை, துறை, விருத்தம் போன்ற உட்பிரிவுகளும் உண்டு. பிறிதொரு சமயம் வாய்க்கும்போது அவற்றைப் பற்றி விரிவாக அலசலாம். மரபுக்கவிதை எழுத விரும்பும் ஆரம்ப கவிஞர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மேற்கொண்டு தங்களை வளர்த்துக்கொள்ள பழந்தமிழ் பாடல்களும், சுய பயிற்சியும் மிக உதவியாக இருக்கும். ஒவ்வொருவரும் முயற்சி செய்து பாக்களை எழுதவேண்டும் என்பதே என் அவா. மரபுக்கவிதை எழுதுவது ஒன்றும் கடினமான செயலல்ல என்பதினை இந்த பதிவு உணர்த்தியிருக்கும். எளிய வார்த்தைகளைக் கொண்டே மரபுக்கவிதை அமைக்கலாம்.
இலக்கணத்திற்காக பாடல் எழுதுவதை விட பாடலின் தன்மைக்கேற்ப இலக்கணம் பொருந்துவதே
சாலச் சிறந்தது.

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 19

கலிப்பா

காய் முன் நிரை வருவது கலிப்பாவுக்கு உரிய இலக்கணம் ஆகும். இது மூவசைச்சீரில் வரும். காய் என்பது மூவசைச்சீர் ஆகும். நான்கசைச்சீரில் பூ முன் நிரையும் வரும்.

கலிப்பாவில் ஈரசைச்சீர்களான மாச்சீரும் விளச்சீரும், மூவசைச்சீரில் விளங்கனிச்சீர் எனப்படும் கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகியனவும் வராது.

ஓசை நயத்தை வைத்து கலிப்பாவினை வகைப்படுத்துகிறார்கள். அவற்றைப்பற்றிக் காண்போம்.

கலிப்பா துள்ளலோசையுடையது. இது காய் முன் நிரையசை வருவது. அதாவது, மூவசைச்சீரையடுத்து நிரையசை வருவாதாகும்.

அருமறையின் நலம் விளங்க
** அவதரித்த ரகுராமா
பெருந்தவத்தின் அருள் விளங்கும்
** பெருமானே புவியமுதே
கருமுகிலின் பெருமழையே
** கலைமணியே கனிந்துறங்கு
திருமகனே எனதுயிரின்
** திகழமுதே தணிந்துறங்கு.

மேற்கண்ட பாடலில் காய்முன் நிரை வந்து கலிப்பாவிற்குரிய துள்ளலோசை பெற்றும், தேமா, புளிமா விளங்கனிச்சீர்கள் வராமலும் இருந்ததால் இது கலிப்பாவில் அமைந்ததாயிற்று.

ஓசை நயம்:-

கலிப்பாவிற்குரிய துள்ளலோசை மூவகைப்படும். அவை ஏந்திசைத்துள்ளல்,
அகவல் துள்ளல், பிரிந்திசைத்துள்ளல் என்பன.

1. ஏந்திசைத் துள்ளல்
இது, காய் முன் நிரை வருவது கலித்தளையாகும்.மேற்கண்ட பாடல் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

2. அகவல் துள்ளல்
இது, நிரையொன்று ஆசிரியத்தளை வருவது. அதாவது கூவிளத்தையடுத்து புளிமாங்காய் வருவது. இதனோடு கலித்தளையும் விரவி வரும்.

எ.டு:-

வண்டுறை நறும் பொய்கை
- வயமோங்கும் கமலத்தைக்
கண்டுறை திருமாதின்
_ கருணையிற் கலந்துறைய
மண்டுறை வறுமையெனும்
_ மதிகெட்ட கொடியவனும்
நுண்டுளிப் புனல் வெயிலில்
_ நுடங்குதல்போல் அழிந்தனனே.

3. பிரிந்திசைத் துள்ளலோசை

இதில் பல தளைகளும் விரவிவரும். அதாவது விளமுன் நேர் வந்து இயற்சீர் வெண்டளையும்,
காய்முன் நேர் வந்து வெண்சீர் வெண்டளையும் வரும். நிரையொன்று ஆசிரியத்தளை வரும்.
கலித்தளையும் வரும்.

எ.டு:-

அதியமான் நன்மனத்தில் ஔவையார் இனிதிருப்ப
நிதியெனக் கனியமுதாய் நெல்லியை உவந்தளிக்கத்
துதிபெறும் நற்றமிழின் ஏற்றத்தை இனிதறிந்து
மதிபெறும் மாந்தரெலாம் மகிழ்ந்தேத்த விழைந்தனரே

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 18

அளவடி வெண்பா

பொதுவாக வெண்பா என்றால் நான்கு அடிகளைக் கொண்டதாக விளங்கும். ஒரே அடியில் நான்கு சீர்கள் கொண்டு வருவது அளவடி எனக் கண்டோம். நான்கு அடிகள்
கொண்டு வரும் வெண்பாப் பாடல்களும் 'அளவடி வெண்பா' எனப்படும். இதனை அளவியல் வெண்பா எனவும் உரைப்பர். மூன்று அடிகளை உடைய வெண்பாப் பாடல்
சிந்தியல் வெண்பா எனப்பெறும்.

இன்னிசை வெண்பா

இதன் இலக்கணம் பின் வருமாறு:

1. முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது அடிகள் நான்கு சீர்கள் கொண்டு இருக்க வேண்டும். நான்காவது அடி மூன்று சீர்களுடன் அமையும்.

2. நான்காம் அடியின் ஈற்றுச்சீர், அதாவது மூன்றாவது சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்பாட்டில் அமையவேண்டும். (காசு, பிறப்பு என்பது குற்றியலுகரம் எனவும், நாள், மலர் என்பது ஓரசையுடைய மாச்சீர், விளச்சீர் எனவும் காண்க.)

3. நான்கு அடிகளின் முதற்சீரிலும் இரண்டாவது எழுத்து ஒன்றி அடி எதுகை கொள்ள வேண்டும்.

4. மாமுன் நிரை, விளமுன் நேர், காய்முன் நேர் என்னும் விதியில் அமைய வேண்டும்.

5. பாடலுக்கு உரிய கருத்து ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய ஐந்து நிலைகளை அடிப்படையாகக் கொண்ட பின்னர் இன்னிசை வெண்பா அமைப்பது எளிது.

(எ.கா)

பூவளரும் காதல் பொருந்தும் குறிஞ்சியொடு
காவளரும் முல்லை கனிமருதம் நெய்தலென்றும்
தேவளரும் பாலையுடன் தேர்ந்து மொழிந்துளதே
மாவளரும் நந்தமிழர் மாண்பு.

அகத்திணை வகையில் காதல் வாழ்வில் மனம் ஒருமித்த தலைவனும், தலைவியும் இணைந்து மகிழ்வது குறிஞ்சி, உள்ளத்தால் ஒன்றி இருப்பினும் உடலால் சிறிது பிரிவு கொள்வது முல்லை. தலைவனின் பிரிவை ஆற்றாது தலைவி புலம்புதல் நெய்தல். தலைவன் தலைவியிடையேயான ஊடலும், பிரிதலும் மருதம் ஆகும். இத்தகைய நெறிமுறையை வகுத்து அவ்வாறு வாழ்வதே தமிழரின் மாண்பு என இன்னிசை வெண்பாவின் இலக்கணத்தில் கவிதை விளம்புகிறது.

நேரிசை வெண்பா

இது இன்னிசை வெண்பாப் பாடலினும் சிறிது மாறுபட்டு வரும். இதில் இரண்டாம் அடியின் நான்காம் சீர் தனிச்சீராக இருக்கும். மற்றபடி இன்னிசை வெண்பாப் பாடலுக்குரிய
இலக்கணமே இதற்கும் உண்டு.

இன்னிசை வெண்பாவில் நான்கு அடிகளிலும் முதற்சீரில் இரண்டாம் எழுத்து ஒன்றி அடி எதுகை பெற்று வரும். நேரிசை வெண்பாவில் முதலடி முதற்சீரிலும் இரண்டாம் அடி முதற்சீரிலும், இரண்டாம் அடியின் நான்காம் சீராக உள்ள தனிச் சீரிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரும். அதாவது முதல் இரண்டு அடிகளில் 'அடி எதுகை' பெறும். இரண்டாம் அடியில் 'ஒரூஉ எதுகை' பெறும். மற்றும் மூன்றாம் அடியின் முதற்சீரும் நான்காம் அடியின் முதற்சீரும் ஒரே எழுத்து கொண்டு அடி எதுகை பெறும்.

அவ்வாறு அமைந்த ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளின் நல்லுரையைப் புகழ்ந்து ஒரு கவிஞர் பாடிய பாடலொன்றைக் காண்போம்.

கண்ணன் திருநாமம் காலையிலும் செம்பவள
வண்ணன் தனிநாமம் மாலையிலும் - திண்ணமிகு
வாஞ்சையுடன் வாழ்த்துகவே என்றுரைத்த சங்கரனார்
காஞ்சிக்கு வாய்த்த கரும்பு.


மீள்பார்வை:-

ஈரசைச்சீரில் மாமுன் நிரையும், விளம் முன் நேரும், அதாவது ஒன்றாத தளை அமையும்படியும், மூவசைச்சீரில் காய் முன் நேர் வருவதும் வெண்பா ஆகும். அடிகளைப் பொறுத்தும் இசை நயத்தைப் பொறுத்தும் வெண்பாவை வகைப்படுத்தலாம். மூன்று சீர்கள் அமையுமாறு எழுதப்படுவது சிந்தியல் வெண்பா என்றும் ஒரு அடியில் நான்கு சீர்கள் வரும்படி எழுதுவது அளவடி வெண்பா எனவும் அழைக்கப்படும். அவற்றில், வெண்பாவின் இலக்கணத்தோடு இரண்டாம் அடியில் தனிச்சீர் பெற்று வருவது நேரிசை வெண்பா எனவும், தனிச்சீரின்றி வருவது இன்னிசை வெண்பா எனவும் அழைக்கப்படும்.

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 17

வெண்பா

பாடல்களில் வெண்பா வகை மிகச் சிறந்த வாய்ந்தவை. இத்தகைய வெண்பா, குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, அளவடி வெண்பா, ப·றொடை வெண்பா,
கலி வெண்பா என ஐந்து வகைப்படும். வெண்பாப் பாடல்களில் குறிப்பிட்ட கருத்தைக் கச்சிதமாகக் கூறலாம். திருக்குறள், நாலடியார், நளவெண்பா, முதலான நூல்கள்
வெண்பாப் பாடல்களால் ஆனவை.

8.1. குறள் வெண்பா

குறள் வெண்பா இரண்டு அடிகளையுடையது. முதல் அடி அளவடியாக நான்கு சீர்களும் இரண்டாவது அடி சிந்தடியாக மூன்று சீர்களும் கொண்டு வரும். இதற்கு உரிய
யாப்பிலக்கணம்

"மாமுன் நிரையும்
விளமுன் நேரும்
காய்முன் நேரும்
வருவது வெண்டளை"

என்பதாகும். ஈற்றுச்சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்ப்பாட்டில் அமைய வேண்டும். இதில்

ஈரசைச்சீர்: பிறப்பு என்பது புளிமா
ஓரசைச்சீர்: நாள் என்பது மாச்சீர் ( நேரசை)
ஓரசைச்சீர்: மலர் என்பது விளச்சீர் ( நிரையசை)

காசு என்பது நேர்பு எனவும், பிறப்பு என்பதனை நிரைபு எனவும் தொல்காப்பியம் சாற்றும்.


இனி, ஒரு குறள் வெண்பாவை எவ்வாறு அமைக்க வேண்டும் எனக் காண்போம்.

1. பொதுவாக, பொழிப்பு மோனை கொண்டு அமைத்தல் போதுமானது. ஏனையவான இணை மோனை, ஒரூஉ மோனை, கூழை மோனை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய் முற்று மோனையும் சேர்ந்து விளங்குமாறு பாடுவது கவிஞனின் விருப்பம். அடி எதுகை வந்தால் போதுமானது. ஏனைய எதுகைகள் கொண்டு அமைப்பதும் கவிஞனின் விருப்பம்.

2. வெண்பாவுக்குரிய தளை - அதாவது மாமுன் நிரை, விளமுன் நேர், காய்முன் நேர் வருதல் வேண்டும்.

3. ஈற்றுச்சீர் - குறள் வெண்பாவின் இரண்டாம் அடியில் வரும் மூன்றாம் சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்ப்பாட்டில் அமைய வேண்டும்.

4. இப்போது கருத்து மட்டும் உருவாக வேண்டும்.

கம்ப இராமயணத்தில் ஒரு காட்சி. கானகம் சென்ற இராமன், பரதன் வேண்டுகோளை ஏற்று நாடு திரும்ப மறுக்கிறான். பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்தபின்னர் வருவதாகக் கூறுகிறான். எனவே, பரதன் இராமனின் பாதுகையைப் பெற்று அதற்குப் பட்டம் சூட்டிப் பணிகின்றான். அப்போது பரதன் தன் தாயான கைகேயின் வரத்தால் இவ்வாறு ஏற்பட்டதே என்று கலங்குகின்றான். இது ஒரு குறள் வெண்பாவாக வடிவம் கொள்கிறது.

மாது வரத்தால் மயல்சேர வாடினனே
பாதுகையைப் பார்த்துப் பணிந்து

இப்பாடலில்,

1. மாது - தேமா - நேர் நேர்
2. வரத்தால் - புளிமா - நிரை நேர்
3. மயல்சேர - புளிமாங்காய் - நிரை நேர் நேர்
4. வாடினனே - கூவிளங்காய் - நேர் நிரை நேர்
5. பாதுகையைப் - கூவிளங்காய் - நேர் நிரை நேர்
6. பார்த்துப் - தேமா - நேர் நேர்
7. பணிந்து - புளிமா - நிரை நேர் இது பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் வந்தது.

முதலடியில் நான்கு சீர்களும் ம, வ என்ற ஓரின மோனை வந்து முற்று மோனையாயிற்று.
இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் 'ப' என்பது மோனையாக வந்து கூழை மோனையாயிற்று.
இது சிந்தடியாதலால் முற்று மோனையும் ஆம்.

மா'து'
பா'து'கையைப்
- து என்பது அடி எதுகை.

மாமுன் நிரையும், காய் முன் நேரும் வந்து வெண்பாவிற்குரிய இலக்கணம் அமையப்பெற்றது.

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 16

அகவற்பா : -

இது ஈரசைச் சீர்கள் நான்கு கொண்ட அளவடியாக வந்து ஈற்றடி
ஈ , ஏ , ஓ , ஆய் , ஐ , அன் என முடிவுறும் .

( எ . க ¡ )

மஞ்சள் வானம்

கொஞ்சும் தோகை

விஞ்சும் அழகு

தஞ்சம் மனமே


நிலை மண்டில ஆசிரியப்பா : -

எல்லா அடிகளும் நான்கு சீர்கள் கொண்டு ஈற்றடி " ஏ " , " என் " என்னும் ஈறு கொண்டு முடியும் .

( எ . க ¡ )

சீலமார் செல்வச் செழிப்புடன் மேவி

ஞாலமார் அறங்கள் நாட்டினில் திகழ

வள்ளுவர் காட்டும் வகையில் மகிழ்ந்து

தெள்ளிதின் வாழி ! திருவார் நிலத்தே!


இணைக்குறள் ஆசிரியப்பா : -

ஆசிரியப்பாவின் இடையில் இரண்டு சீர்களையுடைய குற ளடி நிரவி வருவது
இணைக்குறள் ஆசிரியப்பாவாகும் .

( எ . க ¡ )

தங்கும் இன்பம் நிறையப் பெற்று

எங்கும் இருக்கும் இறையே போற்றி !

கங்கை விடுத்து

எங்கள் தாகம் தீர்ப்பாய் போற்றி !

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 15

பாக்கள் நான்கு வகை:-

1. ஆசிரியப்பா
2. வெண்பா
3. கலிப்பா
4. வஞ்சிப்பா

ஒவ்வொன்றிலும் துறை, தாழிசை, விருத்தம் என்று மேலும் மூன்று இனங்கள் உள்ளன. இவற்றுள் இக்காலத்தில் ஒரு சில மட்டுமே வழக்கத்தில் உள்ளன. கட்டளைக்கலித்துறை,ஆசிரியப்பா, வெண்பா ஆகியவற்றைப் புலவர் பெருமக்கள் விரும்பித் தேர்ந்து பாடல்களை புனைகிறார்கள். சிலர் ஆசுகவிகளாக பாடவும் செய்கிறார்கள். சிலர் தடையின்றி எழுத்து வடிவத்தில் அமைத்துப் படிக்கிறார்கள்.

அருளாளர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பெரியாழ்வார்,
ஸ்ரீ ஆண்டாள், திருமங்கையாழ்வார், குல சேகர ஆழ்வார், நம்மாழ்வார் முதலானவர்கள் இறைவன் அருளால் தாமாகவே பாடினார்கள் என்பதை வரலாறுகள் உரைக்கின்றன. அபிராமி அந்தாதி பாடப்பட்ட விதம் அம்பிகையின் அருள் தன்மையை இயம்புவதாக அமைந்தது.

சான்றோர்கள் தமிழ்ப்புலமை பெற்றுப் பாடிய பாடல்களும் ஏராளம். சங்க காலப் பாடல்கள்
அனைத்தும் அவ்வண்ணமே ஆயின.

எனவே, கவிதைப் புனைய இனிய கருத்தும் அமுத தமிழும் போதுமானது. அதை எளிமையாகவும் அதே சமயத்தில் மரபு தவறாமலும் புனையவேண்டும். அதற்கு இப் பாவகைகள் மிக உதவியாயிருக்கும்.

சரி, முதலில் ஆசிரியப்பாவைப் பற்றிப் பார்ப்போம்.

ஆசிரியப்பா

ஆசிரியப்பா என்பது ஆசிரியர் ஒருவர் மாணவருக்குச் சொல்லும் வகையில் அமைந்ததாகும். நாம் பேசுகின்ற அமைப்பில் இப்பாடல்கள் விளங்குதல் வேண்டும். அதுவே படிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமை பயக்கும். இதற்கு அடிப்படையாக நாம் கைக் கொள்ள வேண்டிய தளைகள் பின்வருவன:

1. நேர் ஒன்றிய ஆசிரியத் தளை
2. நிரை ஒன்றிய ஆசிரியத் தளை
3. இயற்சீர் வெண்டளை

இந்த மூன்றுத் தளைகளைப் பற்றியும் நாம் தளைகள் பாடத்தில் படித்திருக்கிறோம் என்பதை
நினைவுக் கூர்க!

1. நேர் ஒன்றிய தளை - நேர் முன் நேர் வரும்
2. நிரை ஒன்றிய தளை - நிரை முன் நிரை வரும்
3. இயற்சீர் வெண்டளை - மாறி மாறி வரும். அதாவது, நேர் முன் நிரையும், நிரை முன் நேரும் வரும்.

ஞாபகம் வந்ததா?

குறிப்பு: ஆசிரியப்பாவில் கவிதை புனைவது மிக எளிது. ஏனெனில் அசைகள் ஒன்றாக
( நேர்- நேர், நிரை- நிரை) வந்தாலும், வெவ்வேறாக வந்தாலும் ( நேர் - நிரை, நிரை - நேர்)
தளை தட்ட வாய்ப்பே இல்லை. ஆனால் ஈரசைச்சீர்க்கு மேல் வராது. அதாவது காய், கனி,
பூ, நிழல் சீர்கள் வராது; எனில் புனைவது எளிது தானே!

மாச்சீர்(நேரில் முடியும் சீர்), விளச்சீர் (நிரையில் முடியும் சீர்) ஈரசைச் சீர் என்பதை நினைவுக்
கூர்க! அதாவது ஒரு சீரில் இரண்டு அசைகள் இருக்கும். நேர் அசையில் அச்சீர் முடியப்பெற்றால்
மாச்சீர் ஆகும். நிரை அசையில் அச்சீர் முடியப்பெற்றால் விளச்சீர் ஆகும். மேலும் விளக்கத்திற்கு
முன் பாடங்களைக் காண்க!

சரி.. இனி ஆசிரியப்பாவின் வகைகளைப் பற்றிப் பார்ப்போம்.

நேரிசை ஆசிரியப்பா:-

இவ்வகையானது ஆசிரியப்பாவின் தளைகளுடன் (மா முன் நேர், விளம் முன் நிரை, மாமுன் நிரை, விளம் முன் நேர்) எல்லா அடிகளும் நான்கு சீர்களாய்(அளவடி) அமைந்து ஈற்றயலடி அதாவது கடைசி அடிக்கு முந்தைய அடி முச்சீராக அமைந்து ஈற்றடி 'ஏ' காரத்தில் முடிந்தால் அது நேரிசை ஆசிரியப்பா ஆகும். பொதுவாக ஆசிரியப்பா குறைந்தது 3 அடிகளாவது அமையும்.

எ.டு:-

நீல மேனி வாலிழை பாகத்து
---- ----- --------- --------
1 2 3 4

ஒருவன் இருதாள் நிழற்கீழ்
-------- -------- --------
1 2 3

மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே
-------- ------- ----------- ---------
1 2 3 4


இப்பாடலானது ஆசிரியப்பாவின் இலக்கணத்துடன் மூன்றடிகளில் வந்துள்ளது. ஒவ்வொரு அடியும் நான்கு சீர்களாய்-அளவடியாய் அமைந்து ஈற்றயலடி மட்டும் முச்சீராயும், ஈற்றடி முறையே என 'ஏ' காரத்தில் முடிந்ததால் நேரிசை ஆசிரியப்பா ஆயிற்று.

எ.கா:-

ஈரசைச் சீர்கள் மாவும் விளமும்
ஆகிய நான்கும் தெரிந்தால்
ஆசிரி யப்பா புனைதல் எளிதே!

(நேரிசை ஆசிரியப்பாவில் எழுதியது)

ஆஹா! எவ்வளவு எளிமையாக உள்ளது. இது நானே எழுதியது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். அடுத்த பாகத்தில் பிறவகைகளையும் பார்க்கலாம்.