Wednesday, May 25, 2005

ஈரம்

கண்களில் பிசுபிசுப்பு
அவன்
நெஞ்சில் ஈரமில்லை

Thursday, May 12, 2005

கலையாத கோலங்கள்

என் சுவாசத்தைப்போலே
உன் நினைவுகளும்
வந்து வந்து போய்
உயிர் நீதான் என
உரக்க உரைக்கும்

கண்களின் கனவுகள்
நிஜத்தை நினைத்து
கண்ணீராய் மாறி
என்னைக்
கரைத்த பின்னும்
அதன் கோலங்கள் மட்டும்
கலைவதே இல்லை

மெல்லிய ஸ்பரிசமோ
தீண்டும் தென்றலோ
தூரத்து தீபமோ
உயிரின் நாதமோ
முழுமையாய்
அனுபவித்த பிறகு
அங்கே வார்த்தைகளில்லை

அவள் அதில்
தொலைந்துபோனாள்

காவியங்கள் தொலைந்தாலும்
காதாபாத்திரங்கள் தொலையாது
ஊனுடம்பு அழிந்தாலும்
மானுடம் அழியாது
காலம் நகர்ந்தாலும்
காதல் நகராது
__________________

Sunday, April 10, 2005

அவள் போனால் என்ன?

அவள் போனால் என்ன?
அவளைப்பார்த்தா நான் பிறந்தேன்?
அவளால் தானா நான் வளர்ந்தேன்?
அவளே என் வாழ்க்கையாவதற்கு...
அதோ
என்னோடு நடை போடும்
அந்த மேகம்..
இதோ என் பின்னே உலாவரும்
இந்த நிலா..
வெறுத்து வெளியேற்றியும் என்னை
விரும்பும் இந்தக் காற்று..
எப்போதும் என்னுடன் இருக்கும்போது
அவள் போனால் என்ன?

இனிமை தனிமை

வெறும் தனிமை, ஆனால்
வெறுமையில்லா தனிமை
சுதந்திரமான இனிமை
வானுக்கு அடிமையில்லாத மேகம்போல்
கரையைக்கண்டு ஒதுங்காத மீனைப்போல்
தட்டுகளுக்கு செவிசாய்க்காத தராசுபோல்
பூட்டுகளுக்கு பயந்துவிடாத காற்றைப்போல்
உன்னோடு நீ
சுயத்துடன் இருக்கும்
இந்தத் தனிமை
மிக மிக இனிமை
ஆலாபனை இல்லை
ஆட்சேபணை இல்லை
ஆரவாரம் இல்லை
ஆனந்தமே எல்லை!
இந்தத் தனிமை
மிக மிக இனிமை
இனி யாரும் வெறுக்கவேண்டாம்
இந்த வெறுமையில்லாத தனிமை
மிக மிக இனிமை

Monday, April 04, 2005

அங்கே எவரும் இல்லை

நீலக்கடல்...
அங்கே,
ஆரவாரமாய் அலைகள்
அமைதியாய் சில படகுகள்
அடியில் பல ஜீவன்கள்..
தூங்கிக்கொண்டு சில
தூங்காமல் சில
கண்ணுக்குத்தெரிபவை
அலைகள் மட்டுமே!
விளக்கடித்து பார்த்தால் மட்டும்
சில விஸ்வ ரூபங்கள் தெரியும்
இன்னும் இன்னும்
ஆழத்தில் இருப்பவை
கடலும் அறியாதது..
ஆனால்
அங்கே எவரும் இல்லை..
இருளைத்தவிர.

என் கண்ணில் ஏன் விழுந்தாய்?

பார்வையாக சில நேரம்
பாவையாக சில நேரம்
காட்சியாக சில நேரம்
காவலாக சில நேரம்
தூசியாக சில நேரம்
தூண்டலாக சில நேரம்
கனவாக சில நேரம்
கனமாக சில நேரம்
எப்போதும் என் கண்ணில்
நிறை சிறை இருக்கிறாய்
என் கண்ணில் ஏன் விழுந்தாய்?

இன்றும் நீ

உன்னை நினைக்காத பொழுதுகள்
உண்டென்றால் அது என்
நினைவில்லா பொழுதுகள்!
கனவில்லா தூக்கம்
தூங்கத்தான் பிடிக்கும்
உன் கனவிற்காய் தூங்குகிறேன்
பகல் பொழுதில்..

தும்மும் நேரத்தில் கூட
அனிச்சையாய் எங்கே
உன் பெயர் உதிர்ந்திடுமோ?
முகத்தை மூடிக்கொள்கிறேன்
முற்றிலுமாக..

சிறு பிள்ளையிலே
பிரியும் கணங்களிலே
வழியும் ஆறுகள் கண்களிலே
'மாறிவிட்டாய் இப்போது' என்றாய் நீ!
ஆம்! விவரம் தெரிந்தபின்
திரை மறைவில் தான் இப்போதெல்லாம்

ஆனால், நீ
இன்றும் மாறவில்லை!
அதே, கல் நெஞ்சன் தான்!!

Sunday, April 03, 2005

சின்ன கண்ணனுக்கு...

அழகாய் தவழ்ந்து வரும்
ஆலிலைக்கண்ணா வா!
தத்தி தத்தி நடந்து வரும்
தங்க ரதமே வா!
ஓர் விரல் கடித்து
புன்னகை புரியும்
ஒற்றை மயிலே வா!
காலைத்தூக்கி வாயில்
கடிக்கும் கட்டழகே வா!
கொள்ளைப்போகுது
எந்தன் நெஞ்சம்
உன்னில் தானேடா!
கொள்ளை அடித்தவனே!
கள்வனே கொஞ்சம் வாயேன்டா!
குழலால் ஊதி
கீதம் இசைத்து
என்னை மயக்குகிறாய்
ஓரக் கண்ணால்
பார்த்து நீயும்
யாரைத்தேடுகிறாய்?
வெண்ணெய் தரவே
கைகள் நீட்டுகிறாய் - நான்
ஊட்டச்சொன்னால் என்
கண்கள் மூடுகிறாய்
ஒன்றும் தராது
ஏப்பம் விடுகிறாய்
உதட்டில் கொஞ்சம்
ஒட்டி இருக்கிறதே!
உறிஞ்சி நானும்
எடுத்துக்கொள்ளட்டுமா?
உன் பிஞ்சுக்கைகளை
வருடிக்கொள்ளட்டுமா?
உள்ளங் கால்களில்
ஓவியம் வரையட்டுமா?
நீ சிரிக்கும்போது
கட்டி அணைக்கட்டுமா?
நீ மழலை பேசுகையில்
நெஞ்சம் பறக்குது
'அம்மா' எனும் போது
உலகம் மறக்குது
தோளில் போட்டு
தட்டிக்கொடுத்திடுவேன்!
தாலால் பாடி
தூங்க செய்திடுவேன்!
கண்ணா உறங்கு
ஆராரோ! என்
கண்ணே உறங்கு ஆரிராரோ!

விடியலை நோக்கி!

(இளம் கைம்பெண்களுக்கு, இக்கவிதை சமர்ப்பணம் )

தும்பை உடுத்திய
வெண் புறாக்களே!

கட்டுப்பாட்டுச்சிறைகளின்
கரம் பிடித்தது போதும்!
நாண சுவா¢ன் பின்னால்
ஒளிந்திருந்தது போதும்!
மொட்டென்று நீ
மொவ்னித்திருந்தது போதும்!

சூ¡¢யனுக்கு பின்னால்
விடியல் இல்லை!
தங்க வளைய(ல்)ங்களால்
வேண்டாம் உனக்கு பூட்டு!
பட்டு சா¢கைகளால்
போர்த்திவைக்க நீ
பொக்கிச பெட்டியல்ல!
அலங்காரம் 'தன்' வெளிப்பாடு!
அகங்காரம் 'தான்' வெளிப்பாடு!
தன்னம்பிக்கையே வீரம்!
புன்னகையே அழகு!
எழுந்து நில்;துணிந்து செல்!
நீ நடக்கும்
முள்பாதையின் ரத்தம்
நாளை சந்ததியினருக்கு
பூக்களாய் மாறட்டும்!!

தெரிந்தும் தெரியாமல்

அழுகிப்போகும் குப்பைகள்
அமில மழை பொழியும்
என தெரிந்தும்
எரிக்காமல் புதைக்காமல்
பக்கத்து காலி மனையில்
உயிருள்ள பிணங்களாய் நாறும்!

கொட்டும் மழை நீர்
அதிரடி பரிசு என தெரிந்தும்
வடிக்காமல் பிடிக்காமல்
சகதிகளாய் ஓடவிட்டு
ரோடு போடா சாலையை ஏசும்!

பாலிதீன் பைகள்
கால் நடைகளின்
மூச்சு வாங்கிகள்
என தெரிந்தும்
அட்டைப்பைகளை
அலட்சியப்படுத்தும்!

மர மறைவு கழிவுகள்
அநாகரிக அசுத்தங்கள் என தெரிந்தும்
கட்டண கழிப்பறைகளை
நிராகரிக்கும்!

இழுத்து விடும் நிகோடின்கள்
அருகாமை பாலகர்களுக்கு
தாமத விசக்காற்றுகள் என தெரிந்தும்
அநாவசிய சுவாசப்பயிற்சிகளாய்
நொடிக்கொருதரம் விடும்!

அருகே இருக்கும் தங்கையை
காவல் செய்தவாறே
எதிரே இருக்கும் நங்கையை
நோட்டம் விடும்!

தெரிந்தும் தெரியாமல்
இந்த இயற்கை உபாதைகள்
இலவசமாய் கழியப்படும்!

முதல் காதல்

முதன் முதலில்
சந்திக்கப்போகிறேன்
அவனை...
என் காதலியை
நாளை மணமுடிக்கப்போகும்
அவனை...
எப்படி இருப்பானோ?
என்னை விட அறிவானவனோ?
என்னை விட அந்தஸ்தானவனோ?
எனக்குத்தெரியும் - அவள்
அழகிற்கு மயங்குபவள் அல்லள்!

எப்படி பேசுவது அவனிடம்?
பொறாமைத் தீயை
வார்த்தைகள் கொப்பளித்துவிடுமோ?
அவமானம் தாங்காமல்
கண்ணீர் குண்டுகளை
கண்கள் பொழிந்துவிடுமோ?
குரல் அடைத்து
நா தழுதழுத்துவிடுமோ?

ஒத்திசைவில்லா மனதால்
ஒத்திகைகள் கூட
ஒத்திப்போடப்பட்டன!

ஆனால் அவனோ
என் வாசலுக்கே
வந்துவிட்டான்
பத்திரிக்கை ஏந்தியவாறு!

யாரோ ஒருவர்
என் பெயரையும்
பணியையும் கூறி
அறிமுகம் செய்துவைக்க
உடனடி புன்னகையை
உதட்டில் ஒட்டவைத்துக்கொண்டேன்..

எப்படியும் அவனிடம்
சொல்லிவிட வேண்டும்..
அவள் தான் என் கனவு தேவதை என்று
அவள் என் உயிராய் இருந்தாள் என்று
அவளை நீ
இரவு பகல் பாராமல்
கண்ணில் மணிபோல் எப்போதும்
காக்கவேண்டும் என்று
காசு பணம் கேட்டு அவளை
களங்கப்படுத்திவிடக்கூடாது என்று

என் உதட்டை பிரிக்கும்முன்
பத்திரிக்கையை கையில் கொடுத்தான்
"இருபத்து நான்கு மணி நேர
இலவச மருத்துவமனை
ஆரம்பிக்கப்போகிறேன்
வந்து விடுங்கள்" என்று

மகிழ்ச்சி பொங்க
எதுவும் பேசாமல்
வாங்கிக் கொண்டேன்

அவன்
எங்கள் ஊரின்
முதல் மருத்துவன்.

உறவாக வந்தவளே!

எங்கிருந்தோ வந்தாய்!
கணினி முன்னே நின்றாய்!
பாலைவன பேரிச்சையின்
நீர் உறிஞ்சிய அடி மணலாய்
வறண்டு போய் நானிருக்க
நட்புக்கரம் நீட்டி
உறவாக வந்தவளே!
நிழலைப் பிடித்து
நிஜமென்று நின்றிருக்க
முதல் நாள் துவக்கத்திலேயே
மனதுக்குள் மலையாக நிற்கின்றாய்!

என் தனிமை வெயிலுக்கு
சாமரம் வீச வந்தவளே!

எதுவும் நிரந்தரமல்ல! - இது
எனக்கு
அனுபவம் தந்த பாடமடி!

நீ எங்கோ?
நான் எங்கோ?

உன்குரல் அனுதினமும்
எனக்காக சிணுங்கும்போது
உணர்ந்தேன் நான் -என்
உறவாக வந்தவள் நீயென்று!

எதிர் வினை

என்னை மிதிப்பதால்
மண்ணை மிதிக்கிறேன்
மிதியடி!

முள்ளும் மலரும்
அனலில் இட்டால்..
மலரும் கூம்பும்
வாடை தொட்டால்..

Saturday, April 02, 2005

வெற்றியின் மகுடம்!

பொய்களைத் தலையில் சூடி உன்
தலைக்கனம் ஏற்றும் மட்டும்
அலங்கார மோகம் உன்
ஆசைகளை மொய்க்கும்மட்டும்
ஆடம்பர நாகரிகம் உன்
ஆர்வத்தை ஆர்ப்பரிக்கும்மட்டும்
குட்டக் குட்டக் குனிந்து நீ
தியாகிப்பட்டம் ஏற்கும் மட்டும்
மட்டந்தட்டி பேசுவோரிடம்
உரிமைப்பிச்சை கேட்கும் மட்டும்
ஊடகங்களில் சதைகளைக் காட்டி
மதிகளை மயக்கும் மட்டும்
பெண்ணே! நீ
அடிமை போதையிலிருந்து
மீள முடியாது!

காவல் துணையோடு
உலா வருவதற்கு
உனக்கு எதற்கு கால்கள்?

பெண்ணே! நீ
கோப்பை அல்ல!
விரசத்தை நிரப்பி
விலை போவதற்கு!

சொர்க்கமே என்றாலும்
சொந்தக்காலில் நின்றிடு!

பள்ளிக்கு செல்லேல்
கள்ளிப்பால் அருந்திடு!

அறிவுக்கண் கொண்டு
ஆழ்ந்துணர்ந்து வென்றிடு!

அன்பால் அகிலத்தை
அரவணைத்துச் சென்றிடு!

ஏன் என்ற கேள்வி தான்
அடிமைத்தனத்திற்கு மருந்து!

உன் காலில் நீ நிற்கும் நன்னாளில்
ஊருக்கு வை விருந்து!

அன்று சாதனைப்புன்னகை
சூட்டட்டும் உனக்கு
வெற்றியின் மகுடம்!

மகுடி ஊதும் பாம்புகள்

"ஆயிரத்தில் ஒருத்தி"

"அழகான புன்னகை"

"சிந்தை கவரும் வெட்கம்"

"செங்காந்தல் விரல்கள்"

"செஞ்சாந்து பாதம்"

"அன்பிற்கு இனியவள்"

"சுட்டு விழி பார்வை"

"இல்லாத இடை"

"இடை தேடும் ஜடை"

"கொடி மலர் தேகம்"

இப்படி.......

காண இயலுபவைகளுக்கு கவர்ச்சியாய்
காணாதவைகளுக்கு கற்பனையாய்

மகுடி ஊதுமடி பெண்ணே!
இவை 'நல்ல' பாம்புகளல்ல!

உன்
சிந்தை மயங்கச்செய்து
விழுங்க காத்திருக்கும்
மலை விழுங்கிகளடி!

" விழிமின்! விழிமின்!! "

விவேகம் மிக்கவரின்
பொன்மொழியடி!

மகுடி கேட்கும்
கேட்கும் பேதையே!
இதையும் கொஞ்சம் கேளடி!
" விழிமின்! விழிமின்!! "

Thursday, March 31, 2005

ஏ! மனிதா!

இன்னும் நீ
ஆடை உடுத்திய
ஆதிமனிதன் தான்!

ஏனெனில் உடைகளணிந்தும்
கூட உடலியல் கூறு காண்கிறாய்!

மிருகங்கள்
உடைகள்
அணிவதுமில்லை!
அவிழ்த்து
அவமானப்படுத்துவதுமில்லை!

ஜீன்சு உடுப்புகள்
ஜீன் பரிணாமத்தை
புதுப்பிக்காதது ஏன்?

இன்னும் நீ
வேட்டையாடும்
ஆதிமனிதன் தான்!

அன்று மிருகங்களை!
இன்று மனிதர்களை!

அழிப்பாய்
அன்றேல்
அழிக்கப்படுவாய்
எனும் கால்
அழிக்கப் புறப்பட்டவன் நீ!

இன்னும் நீ
உயிர் புசிக்கும்
ஆதிமனிதன் தான்!

அன்று பச்சையாய்
இன்று பக்குவமாய்

அஞ்ஞானம்
ஆடும் மட்டும்
விஞ்ஞானம்
விரிந்தென்ன பயன்?

உன் ஆதிக்க
ஆணவத்தை
அவை
வெளிச்சம்
போட்டதுதான் லாபம்!
அவை
இழந்த உயிர்களையா
திருப்பித்தரும்?

உன் மூதாதை
உரைக்குமட்டும்
உனக்குத்தெரியாது
நீ
ஆறறிவுப்பிராணி என்று!

தெரிந்து தான் என்ன?
மனிதனாகவா இருக்கிறாய்?

வயிற்றில் அடித்து
வாயை நிரப்புகிறாய்
என்றேனும் உன்
மனம் நிறைந்ததுண்டா?

மனம் இருந்தால் தான்
நீ
மனிதன்

எப்படி அறிவாய் பாவம்!
உன் கோரைப்பற்கள்
கிழித்ததெல்லாம்
இதயங்கள் தானே!

Wednesday, March 30, 2005

இது நம் புராதன வீடு!

ஒழுகும் கூரைகளை
சரி செய்வோம்
அழுகும் பிள்ளைகளை
சிரிக்கச் செய்வோம்

தொங்கும் ஒட்டடைகளை
துவட்டி எடுப்போம்
எங்கும் சுத்தமாய்
இருக்கச் செய்வோம்

கோப்புகளை எல்லாம்
தூசு தட்டுவோம்
கலைந்த புத்தகங்களை
அடுக்கி வைப்போம்

கிழிந்த திரைச்சீலைகளை
நீக்கி விடுவோம்
கறை படிந்த தரையை
துடைத்து எறிவோம்

விரிசல் சுவர்களை
இணைத்து வைப்போம்
பழுதை எல்லாம்
புதிது செய்வோம்

இது நாம் புதுப்பித்த வீடு!

நினைவுப் பரிசுகளை
நிமிர்த்தி வைப்போம்
புகைப் படங்களை
மாட்டி வைப்போம்

பூக்களை ஆங்காங்கே
செருகி வைப்போம்
நறுமணம் எங்கும்
பரவச் செய்வோம்

பழையன யாவையும்
பாது காப்போம்
புதியன வற்றிற்கு
அங்கீகாரம் அளிப்போம்

இது தோட்டம் சூழ்ந்த வீடு!

தோட்டமும் இணைந்தது
நம் வீடு!
அனுதின மலர்கள்
தனியே!
சுவை தரும் கனிகள்
தனியே!
மருத்துவ மூலிகைகள்
தனியே!
பருவ காலப் பயிர்கள்
தனியே!
ஒவ்வொன்றும் ஒரு வகை!
அத்தனையும் தரும் உவகை!

இது நம் எழில் வீடு!

மலர்ச் செடிகளை
வாசலில் வைப்போம்

மாவிலைத் தோரணங்கள்
கட்டி வைப்போம்

மரங்கள் அரணாய்
வலுச் சேர்க்கும்

கருவேலமும் வேலியாய்
துணை நிற்கும்

எதுவும் இங்கே
வீண் இல்லை!

இது மைதானம் தாங்கிய வீடு!

இது குழந்தைகளும்
விளையாடும் வீடு!
தெரு நாய்களை
உள்ளே அனுமதியோம்
வாசல்களை பலமாய்
பூட்டி வைப்போம்
ஆபாசச் சுவரொட்டிகளை
கிழித்தெறிவோம்
யாவரிடத்தும் நாகரிகமாய்
நடந்து கொள்வோம்
இது நம் பண்பாடு
பறைச் சாற்றும் வீடு!

இது நம் ஜன நாயக வீடு!

ஆலோசனைகள்
ஆயிரம் அங்கீகரிப்போம்
தீர்வு ஒன்றாய்
தீர்மானிப்போம்

புதுமைகள் பலவாய்
புரிந்திடுவோம்
செம்மையாய்
செழுமை சேர்த்திடுவோம்

குறைகள் கேட்டு
நிவர்த்தி செய்வோம்
நிறைகள் கண்டு
பயன் பெறுவோம்

இது நம் ராஜ்ய வீடு!

ஒரே தலைவனின் கீழ்
ஒற்றுமையாய் வாழும்
இது நம் ராஜ்ய வீடு!

என்னை விட்டுப் போ..

ரிக்டர் அழுத்தம்
நானோ வேகம்
சதவீத ஊக்கம்
இருந்தும் இல்லை ஆக்கம்
'பிறகு பார்க்கலாம்' எனும்
பாரன்ஹீட் சோம்பலே!
என்னை விட்டுப் போ..
கவிதை மழை
என்னில் இறங்கிவிட்டது.

Tuesday, March 29, 2005

தையலின் தையல்

கண்களைத்திறந்தாலும் நீ!
கண்களை மூடினாலும் நீ!
நினைவுச்சிதறலினால்
நேற்று காபியில் உப்பு!
இன்று சாம்பாரில் சர்க்கரை!
என் புத்திக்குள் நின்று
ஆடுகிறாய் சடுகுடு!
மன பரப்புகளை
ஆக்ரமிக்கிறாய் மா வீரனாக!
சொல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
தொண்டைக்குள் தைத்த
மீன் முள் செருகலாய்..
தைத்துக்கொண்டது
இதயம் மட்டுமல்ல
குரல் வளையும் தான்!

நீ வருவாய் என!

எனக்கு
ராமனையும் தெரியாது!
சீதையையும் தெரியாது!

உனக்காக காத்திருக்கிறேன்
நான் நானாகவே!

என்றாவது வா!
நீ நீயாகவே!